உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் தலவரலாறு புத்தகங்கள் எப்போது கிடைக்கும்

கோவில்களில் தலவரலாறு புத்தகங்கள் எப்போது கிடைக்கும்

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்களில் உள்ள ஆன்மிக புத்தக நிலையங்களுக்கு, இரண்டு ஆண்டுகளாக, தலவரலாறு புத்தகங்கள் வராமல் உள்ளது.

கோவையின் பிரசித்தி பெற்ற கோவில்களில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில்களில், ஆன்மிக புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தக நிலையத்திற்கு, சென்னையில் இருந்து ஆன்மிக புத்தகங்கள், கோவில் காலாண்டர்கள், அந்தந்த கோவில் தலவரலாறு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக, அந்தந்த கோவில்களின் தலவரலாறு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனால், இக்கோவில்களுக்கு வரும் பக்தர்கள், இந்த கோவில்களை பற்றி அறிந்து கொள்ள ஆன்மிக புத்தக நிலையத்தில், தலவரலாறு புத்தகங்களை கேட்கின்றனர். ஆனால், புத்தகம் தற்போது இல்லை என, பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தல வரலாறு புத்தகங்கள், அந்தந்த கோவில்களில் கிடைத்தால், பக்தர்களுக்கும் அந்த கோவிலை பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதோடு, கோவிலுக்கும் வருமானம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !