காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் ஸம்ப்ரோக்ஷண விழா
சூலூர்: காங்கயம்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் மகா ஸம்ப்ரோக்ஷண விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த காங்கயம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து, ஸம்ப்ரோக்ஷண விழா, 16 ம்தேதி காலை கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. மாலையில், வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கும்ப ஸ்தாபனம் மற்றும் முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால ஹோமம் பூர்ணாகுதி நடந்தது, மதியம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் காங்கயம் பாளையம் ஐயப்பன் கோவிலில் இருந்து துவங்கி, பெருமாள் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து, விமான கலசம் நிறுவப்பட்டது. மூன்றாம் கால ஹோமம் , மூல மந்திர ஹோமங்கள் நடந்தது. பின், தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை நான்காம் கால ஹோமம் முடிந்து, 8:00 மணிக்கு விமானம் மற்றும் மூல மூர்த்திகளுக்கு மகா ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.