உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்குங்க!

பழமையான கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்குங்க!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், சப்–கலெக்டர் ராமகிருஷ்ணசாமி தலைமையில், பெரிய நெகமம்  உள்வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி  நடந்தது. தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய்துறை அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.


மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை,  பட்டா மாறுதல் என மொத்தம், 85 மனுக்கள் வழங்கப்பட்டன. அதில், இரண்டு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். வரும், 23ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு நடைபெறுகிறது. நடவடிக்கை தேவை  பெரிய நெகமம், சின்னேரிபாளையம் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் ரவி மற்றும் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:


பொள்ளாச்சி – திருப்பூர் ரோட்டில், தனியார் டிப்போவுக்கு வரும் கனரக வாகனங்கள், கடந்த, 10 ஆண்டுகளாக தினசரி வாடகை ஒப்பந்தப்படி நிறுத்தப்படுகின்றன. இங்கு நிறுத்தம் செய்யும் இடத்துக்கு மேலாக, பெரிய டவரில் மின்பாதை உள்ளது. விபத்து ஏற்படும் என்பதை அறியாமல் செயல்படுகின்றனர். மேலும், மண் புழுதி அதிகளவு பரவுவதால் பாதிப்புகள் ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னேரிபாளையம் கிராமத்தில் உள்ள பள்ளங்களை துார்வாரி வண்டல் மண் விவசாயிகள் எடுக்கவும், நீர்நிலைகள் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கோவிலை கவனியுங்க! ஆவலப்பம்பட்டி  மதர் இந்தியா சர்வீஸ் டிரஸ்ட் செயலாளர் சந்திரசேகர் மற்றும் பலர் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேலாயுதசாமி கோவில் கிராமத்தில் உள்ளது. பழமை வாய்ந்த கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இக்கோவில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சிதிலமடைந்த கோவிலில் மேற்கூரை இல்லாமல், கட்டடத்தில் மரங்கள் வளர்ந்து பராமரிப்பின்றி உள்ளது. கோவிலுக்கு செல்ல பொதுப்பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது. எனவே, கோவிலை புனரமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !