உலகளந்த பெருமாள் கோவில் புராதானத்தை பாதுகாக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சன்னதி வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும், பஞ்ச கிருஷ்ணரன்ய ஷேத்ரத்தின் ஐந்தாவது தலமாகும். இதிகாசங்களில் குறிப்பிடும் அளவிற்கு பழமையும், பெருமையும் வாய்ந்த கோவில். ஆனால் இன்று கோவிலுக்கு செல்லும் சன்னதி வீதியில் பக்தர்கள் வந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
வரும் ஜூலை 5ம் தேதி ராஜகோபுரங்கள், பிரதான சன்னதிகள் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோஷனம் எனப்படும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்ல முடியாத சூழலில், கோவிலின் பெருமையையும், புராதானத்தையும் தாங்கி நிற்கும் கோபுரத்தின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இது தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் நில அளவைத் துறை சன்னதி வீதியில் ஆக்கிரமிப்புகளை அளந்து அளவீடு செய்துள்ளது. ஆனால் நகராட்சி நிர்வாகமும், வருவாய்த் துறையையும் இணைந்து இதனை அகற்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இது ஒரு புறம் இருக்க, கோவில் இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுக்கவும் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையிடம் கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சன்னதி வீதியில் இரு பக்கமும் கலை நயத்துடன் அழகுற அமைந்திருக்கும் எட்டு உரியடி மண்டபங்களும் வெளியில் தெரியாதவாறு ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதில் ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் தற்பொழுது உறியடி மண்டபம் வெளியில் தெரியும் வகையில் தானாகவே முன்வந்து அகற்றி உள்ளனர். எஞ்சியவை ஆக்கிரமிப்பின் பிடியில் கட்டுண்டு உள்ளது. அதேபோல் கிழக்கு ராஜகோபுரம் அதாவது கோவிலின் நுழைவு வாயில் கோபுரத்தின் இரு பக்கத்திலும் ஆக்கிரமிக்கப்பட்டு நிரந்தர கடைகள் இருந்தது. இதனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து அகற்றியுள்ளது அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதேபோல் கோவிலின் மதில் சுவரை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி வெள்ளை அடித்தால் கோவிலின் பிரம்மாண்டம் வெளிப்படும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் ஆசையாக உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு இருக்கும் சூழலில், வருவாய் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து சன்னதி வீதி மற்றும் கோவிலை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்களே அகற்றிக் கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் நில அளவையர்கள் மேற்கொண்டிருக்கும் அளவு குறியீட்டுக்கு ஏற்ப ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற வேண்டும்.
மூன்றடி மண் கேட்டு உலகையே அளந்த உலகளந்த பெருமாளின் இடத்தை ஆக்கிரமித்திருக்கும் சுயநல சக்திகளின் பிடியிலிருந்து, பெருமாளை விடுவிக்க அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் முன் வர வேண்டும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்பாக இது நடைபெறுமா என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.