திருப்போரூர் மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
திருப்போரூர்: மஞ்சுநாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்போரூர் அடுத்த மேல்கல்வாய் கிராமத்தில் மஞ்சுநாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கோவில் புனரமைக்கப்பட்டு, கடந்த 22ம் தேதி காலை விநாயகர் பூஜையும், மாலை முதல் கால யாக பூஜையுடன் மஹா கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 23ம் தேதி காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையுடன், மஞ்சுநாதேஸ்வரர் சுவாமி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசேஷ ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி நிகழ்வும் நடந்தது; நேற்று முன்தினம் மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை நான்காம் கால யாக பூஜையுடன், யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கலசங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு கோவிலை சுற்றி வந்து, விமான மண்டப கும்பத்திற்கு புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, அவர்களின் ‘ஓம் நமச்சிவாய’ முழக்கம் விண்ணதிரச் செய்தது. தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.