காஞ்சி கோவில்களில் கும்பாபிஷேகம்; சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நடத்தி வைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி கோவில்களின் கும்பாபிஷேகத்தை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் நேற்று நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில், ஒரே வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் மற்றும் சீதா, லட்சுமண பக்த அனுமன் சமேத ராமச்சந்திர சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில்களில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 9:00 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு நடந்தது. இதில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் மற்றும் ராமச்சந்திர சுவாமி கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ., அமைப்பாளர் கே.டி.ராகவன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் ஜெகதீசன், துணைத் தலைவர் ஓம்சக்தி பெருமாள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.