நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவிலில் அதிகார நந்தி வாகன காட்சி
திருப்பூர்: நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வரசுவாமி கோவில் ஆனி தேர்த்திருவிழாவில், இன்று அதிகாரநந்தி வாகன காட்சி நடைபெற்றது; நாளை பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற உள்ளது.
ஸ்ரீவிசாலாட்சியம்மன் உடனமர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஆனி தேர்த்திருவிழா, கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மனோன்மணி அம்மன் சமேத ஸ்ரீசந்திரசேகரர் பல்லக்கில் திருவீதியுலா மற்றும் சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை, 6:00 மணிக்கு, சோமாஸ்கந்தர் சிறப்பு அலங்காரத்துடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார்.
நாளை பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விநாயகர், முருகர், விசாலாட்சி அம்மன், சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர் 28 ம் தேதி மாலை, சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன காட்சியும் நடைபெறும். 29ம் தேதி காலை, விநாயகர் மற்றும் சோமாஸ்கந்தர் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது; தொடர்ந்து, மாலை, 4:00 மணிக்கு, தேரோட்டம் நடைபெற உள்ளது.தேர்த்திருவிழாவையொட்டி, தமிழ் மணம் விருது பெற்ற விஸ்வநாதன் குழுவினரின், பவளக்கொடி கும்மியாட்டம் நேற்று இரவு நடந்தது.