வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா கோலாகலம்
திருப்போரூர்: நெல்லிக்குப்பத்தில் வேண்டவராசி அம்மன் கோவிலில், 67ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், 67ம் ஆண்டு ஆடி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி காலை 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில், 5:00 மணிக்கு, இரண்டாம் கால மஹா பூஜை, பூர்ணாஹுதி நடந்தது.
அன்னை வேண்டவராசி மூலவருக்கு 108 சங்கு அபிஷேகமும், 7:00 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
பின் 9:00 மணிக்கு, 308 பால்குடம் மற்றும் தீர்த்தம், திருமண்டப திருக்குளத்திலிருந்து கொண்டுவந்து உற்சவருக்கு மகா அபிஷேகம் நடந்தது.
அதை தொடர்ந்து விசேஷ அலங்காரமும் , தீப துாப ஆராதனையும் நடந்தது.
பகல் 1:00 மணிக்கு கூட்டு வழிபாடு தீப துாப ஆராதனையும் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவையும், இரவு அம்மன் வீதி உலா வைபவமும் நடந்தது.
விழாவில், பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசித்தனர்.