உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா தொடக்கம்

மயிலாப்பூரில் ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா தொடக்கம்

சென்னை: சென்னை மயிலாப்பூரில், ஸ்ரீகிருஷ்ண மஹோத்சவ விழா நேற்று தொடங்கியது.


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ஸ்ரீ ஞான அத்வைத பீடம், ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை, பாரதிய வித்யா பவன் ஆகியவை இணைந்து, ‘ஸ்ரீகிருஷ்ண மஹோத்வசம்’ என்ற விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இந்த வகையில், 16ம் ஆண்டாக ஆறு நாட்கள் நடக்கும், ‘ஸ்ரீ கிருஷ்ண மஹோத்சவம்’ விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவில், ஸ்ரீ விஷ்ணு மோகன் அறக்கட்டளை தலைவர், சுவாமி ஸ்ரீ ஹரி பிரசாத் பேசியதாவது: ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தை நிறுவிய பூஜ்யஸ்ரீ சத்குரு சுவாமி ஞானானந்த சரஸ்வதி மாதாஜியின் 97-வது ஜென்ம ஜெயந்தியை முன்னிட்டு, இந்த ஆன்மிக விழா ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் 112-க்கும் மேற்பட்ட கோவில்களில், அன்னதான நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவது, ‘அனைவரும் அவருக்கே உரியவர்கள்’ என்பதே. ‘எவர் எந்த வழியில் என்னை அணுகினாலும், அவர்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்; பிற தெய்வங்களை வழிபடுபவர்களும் என்னையே வழிபடுகின்றனர்; அவர்களின் நம்பிக்கையை உறுதியாக்குபவனும் நானே’ என, பகவத் கீதையில் அவர் அருளியுள்ளார். இதனால், பகவானிடம் ‘பிறர்’ என்ற பாகுபாடே இல்லை. இத்தகைய சிறப்புமிக்க ஆன்மிகக் கருத்தை, 16 ஆண்டுகளாக பிரவசனம், சங்கீதம் மற்றும் நாட்டியக் கலைகள் மூலமாக தொடர்ந்து பரப்பும் பணி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். நேற்று தொடங்கிய இந்த விழா, ஆக., 5 வரை நடக்கிறது. 


என்னென்ன நிகழ்வுகள்? இன்று துஷ்யந்த் ஸ்ரீதரின் உபன்யாசம், திருச்சூர் சகோதரர்கள் இசை கச்சேரி நடக்கிறது. நாளை, சுசித்ரா பாலசுப்ரமணியன் சொற்பொழிவும், நாளை மறுநாள், வைஷ்ணவி ராமதாஸ் இசை கச்சேரி மற்றும் சுஜாதா மொஹாபத்ராவின், ‘ஒடிசி’ நடன நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, ஆக., 4ல், கோபிகா வர்மாவின் மோகினியாட்டம், பத்மினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மாணவர்களின் ‘பரதநாட்டியம்’ நடக்கிறது. ஆக., 5ம் தேதி, உ.வே.தாமல் ராமகிருஷ்ணனின் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. அனுமதி இலவசம்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !