மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா கோலாகலம்
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 55வது ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, 55வது ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் மேலதாளங்கள் ஒலிக்க, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன்பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், அதிகாலை 12:05 மணிக்கு தொடங்கி வைத்தனர். இதில், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தெற்கு ரயில்வே ஓய்வு பெற்ற பொது மேலாளர் ஜெயந்த் உள்ளிட்ட மாவட்ட நீதிபதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பாலாபிஷேகம் இன்று மாலை வரை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோயம்புத்துார், திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மணி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். செங்கல்பட்டு மாவட்ட போலீசார் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.