திருச்செந்தூர் ஆவணி திருவிழா; பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதி உலா
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா எட்டாவது நாள் சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது ஆவணி திருவிழா. இந்தாண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-வது திருநாள் இன்று காலை சுவாமி சண்முகருக்கு பச்சை சாத்தி மண்டபத்தில் வைத்து பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில், பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பச்சை நிற உடை உடுத்தி அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர். இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி ஆன தேரோட்டம் ஒன்பதாம் தேதி காலையில் நடைபெறுகிறது.