/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
பாவனைக்கு ஒரு பாலாஜி: பரவை தந்த புதிய பறவை
/
பாவனைக்கு ஒரு பாலாஜி: பரவை தந்த புதிய பறவை
UPDATED : ஜன 21, 2024 03:36 PM
ADDED : ஜன 21, 2024 02:16 PM

பல சினிமாக்கள் வெளியாவதும், அவை சிலநாட்கள் பேசப்பட்டு பின் மறந்து விடுவது போன்ற வழக்கமான சினிமாவாக இல்லாமல் பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ள படம் சித்தா. இப்படத்தில் கதாநாயகனுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உளவுத்துறை போலீசாராக நடித்து முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் மதுரை அருகே பரவையை சேர்ந்த பாலாஜி.
இவர் சித்தா படத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்மாமா கேரக்டரில் நடித்துள்ளார். இவர் படத்தில் வசனங்கள் இல்லாத காட்சிகளில் முக பாவனையிலே நட்பின் ஆழத்தை வெளிப்படுத்துவது சிறப்பாக இருக்கும். பாலாஜி கூறியதாவது: மதுரையில் டிகிரி முடித்து சென்னையில் எம்.எஸ்.சி., வைராலஜி படித்தேன். படிக்கும் காலங்களில் சினிமாவில் நடிக்கும் சிந்தனை இல்லை. எனது அண்ணன் திரைத்துறையில் சாதிக்க தொடர் முயற்சிகள் செய்து கொண்டிருந்தார்.
அவர் குறும்படங்கள் இயக்கிய போது உறுதுணையாக கதை டிஸ்கஷன், படப்பிடிப்பு பணிகளில் அவ்வப்போது உதவுவேன். அப்போது நான் தனியார் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்திருந்த போதும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எட்டிப்பார்த்தது. பின்னர் சிந்துபாத் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். அங்கு விஜய் சேதுபதியின் அறிமுகம் கிடைத்தது.
அதன்பின் நடிப்பதற்காக பயிற்சி வகுப்பில் சேர்ந்து நுணுக்கங்களை கற்றேன். பின்னர் சித்தா படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் உளவுத்துறை போலீஸ் கேரக்டரில் நடிக்க இயக்குனர் கூறினார். அந்த கேரடக்டரில் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்பதற்காக உளவுத்துறையில் பணிபுரியும் சில போலீசாரிடம் அனுபவங்களை கேட்டறிந்தேன். சில நாட்கள் அவர்களுடனே பயணித்தேன் படப் பிடிப்பில் ஒரு காட்சியில் கண்ணீர் ததும்ப நடித்த போது அதை பார்த்து நடிகர் சித்தார்த் பாராட்டியது மறக்க முடியாத நிகழ்வானது.
படம் வெளியான பின் நடிப்பை பாராட்டி பலரும் வாழ்த்தியது உற்சாகத்தை தந்தது. பாலியல் தொந்தரவால் பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த படம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு படமாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றார்.தமிழ் திரையுலகில் நடிப்பிற்கென்றே வந்திருக்கின்ற மதுரையின் பரவை தந்த இந்த புதிய பறவை பட்டொளி வீசி பறக்கட்டும்.

