
எஸ்.அகிலா, வேளச்சேரி, சென்னை.
*கார்த்திகையன்று விரதமிருந்து மொட்டை அடிக்கலாமா?
மொட்டை அடிக்கலாம். காலம் காலமாக பழநி, வைத்தீஸ்வரன் கோயில்களில் கார்த்திகையன்று விரதமிருந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள்.
வி.ரமணி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*பிரதோஷத்தன்று பயறு கலந்த வெல்ல அரிசி தருவது ஏன்?
@பாற்கடலை கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதன் உக்கிரம் தாங்காமல் நந்தீஸ்வரர் மயக்கமானார். அதிலிருந்து விடுபட காப்பரிசி (வெல்லம் கலந்த பச்சரிசி) கொடுத்தார் சிவபெருமான். இதனடிப்படையில் பிரதோஷத்தன்று காப்பரிசி தருவர். தற்காலத்தில் பயறும் சேர்க்கின்றனர்.
ஆர்.நந்தினி, மேலுார், மதுரை.
*கருமாரியம்மன் பாதத்தில் ஒரு பெண்ணின் முகம் உள்ளதே...
அது பரசுராமரின் தாயார் ரேணுகாதேவி. இவர் பார்வதியின் மற்றொரு அம்சம்.
ஆர்.ரவி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு.
*கோள்சாரம் என்றால் என்ன?
கிரகங்களின் இயக்கத்தைப் பற்றிச் சொல்வது கோள்சாரம். கோள் - கிரகம். சாரம் - சஞ்சாரம் (இயக்கம்).
ஆர்,ராமானுஜம், பெரியகுளம், தேனி.
*பெண்புலவர் அவ்வையார் ஒருவரா பலரா...
அவ்வையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். வள்ளல் அதியமான் காலத்தில் வாழ்ந்தவர் வேறு. இடைக்காலத்தில் விநாயகர் அகவல் பாடியவர் வேறு. எப்படி இருப்பினும் அவர் தமிழுக்கு தொண்டு செய்தவர்.
எம்.தருண், தமிழர் என்கிளேவ், டில்லி.
*பொறாமைத்தீ அடங்க யாரை வழிபடலாம்?
தன்னம்பிக்கையை வளர்த்தால் பொறாமைத்தீ வராது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துங்கள். பிரச்னை தீரும்.
எம்.பன்னீர்செல்வம், திருக்கோவிலுார், விழுப்புரம்.
*கந்த புராணம் முற்றோதல் வீட்டில் நடத்தலாமா?
நடத்தலாம். பக்தி இலக்கியம் அனைத்தையும் முற்றோதல் நடத்தலாம். அத்துடன் அன்னதானம் அளிப்பதும் புண்ணியம்.
எம்.ராஜாராம், தச்சநல்லுார், திருநெல்வேலி.
*உற்ஸவர் சிலை தேய்ந்திருந்தால் புதிதாக செய்யலாமா?
பழைய சிலைகள் நாளடைவில் தேய்வது இயல்பே. ஆனால் காலம் காலமாக பூஜை செய்து அதிக சக்தியுடன் இருக்கும் அவற்றை மாற்றத் தேவையில்லை. உதாரணம்: திருச்செந்துார் முருகப்பெருமான்
உ.அருணாதேவி, அவினாசி, திருப்பூர்.
*புதிய மூலவரை பிரதிஷ்டை செய்யும் போது சேதமடைந்த சிலையை என்ன செய்யலாம்?
கடலில் விட்டு விடுவது வழக்கம். இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வசதியாக அவற்றை பாதுகாக்க வேண்டும் என்கிறது தொல்லியல் துறை. அதுவும் நல்ல விஷயமே!.

