ADDED : மே 10, 2024 12:42 PM

'படிப்பில் எங்கள் குழந்தை சாதிக்க வேண்டும்' என ஆசைப்படுபவரா நீங்கள்... உங்களின் கனவு பலிக்க புதுச்சேரி முத்தியால்பேட்டை ஹயக்ரீவரை தரிசனம் செய்யுங்கள்.
பிரம்மாவிடம் இருந்த வேதச் சுவடிகளை அபகரித்த அசுரர்கள், கடலுக்கடியில் மறைத்து வைத்தனர். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக வந்த திருமால் வேதங்களை மீட்டார். இவருக்கு கடலுார் திருவஹிந்திர புரம், செங்கல்பட்டு செட்டி புண்ணியத்தில் கோயில்கள் உள்ளன. இந்த இரண்டுக்கும் இடையே புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் இந்தக் கோயில் உள்ளது.
1971ல் பக்தர்கள் சிலரின் முயற்சியால் இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் சாளக்கிராமக் கல்லால் ஆனவர். பக்தர்களை வலக்கண்ணாலும், தாயாரை இடக்கண்ணாலும் பார்த்தபடி இருக்கிறார். அதே போல தாயார் வலது கண்ணால் பெருமாளையும், இடக் கண்ணால் பக்தர்களையும் பார்த்தபடி இருக்கிறார். தம்பதி ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை அதிகரிக்க இவரை வழிபடுங்கள்.
அனுமனை தரிசித்த மகான் லட்சுமி குமாரதாத்த தேசிகருக்கு சன்னதி உள்ளது. இங்கு நடக்கும் ஆவணி ஓணத் திருவிழா விசேஷமானது. கொடிமரம், உற்ஸவர் மண்டபம் தங்கத்தால் ஆனவை.
கருடாழ்வார், நவநரசிம்மர், ஆண்டாள் சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது: புதுச்சேரி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ.,
விசேஷ நாள்: வியாழன், திருவோணம், ஏகாதசி.
நேரம்: காலை 8:00 - 11:00 மணி; மாலை 6:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 90954 28302
அருகிலுள்ள தலம்: திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் 32 கி.மீ., (நிம்மதியுடன் வாழ...)
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04142 - 287 515