
குஜராத் மாநிலம் வாடி நகரில் துந்திராஜ் கணபதி என்னும் பெயருடன் விநாயகர் கோயில் உள்ளது. இவருக்கு இரு மனைவி, இரு மகன்கள் உள்ளனர். இவரை வழிபட்டால் நல்ல புத்தி, வெற்றி, தொழிலில் லாபம் உண்டாகும். வெள்ளி அன்று அல்லது பிறந்த நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்தால் தடை நீங்கும். சுபநிகழ்ச்சி நடக்கும்.
மர வேலைப்பாடு நிறைந்த இக்கோயில் 175 ஆண்டுகளுக்கு முன்பு திவான் கோபால்ராவால் கட்டப்பட்டது. பளிங்கு கல்லால் ஆன மூலவருடன் மனைவியர் சித்தி, புத்தியும், மகன்கள் லாப், லக்ஷ் உடன் உள்ளனர். தொந்தியுடன் காட்சி தரும் இவரை பக்தர்கள் 'துந்தி ராஜ்' (தொப்பையப்பர்) என செல்லமாக அழைக்கின்றனர். நான்கு துாண்கள் கொண்ட மண்டபமாக கருவறை உள்ளது. 'இவர் சக்தி மிக்கவர்' என கல்வெட்டில் குறிப்பு உள்ளது.
வாகனமான மூஞ்சூறு பளிங்கு மண்டபத்தில் காலை உயர்த்தியபடி மோதகத்தை சாப்பிடும் கோலத்தில் உள்ளது. அதன் காதில் வேண்டுதலைச் சொன்னால் விருப்பம் நிறைவேறும். கருவறையின் எதிரில் நீரூற்று உள்ளது.
44 ஆயிரம் சதுரடி கொண்ட இக்கோயில் இரண்டு அடுக்குகள் கொண்டது. குஜராத், மராத்திய கலாசார பாணியில் பல வண்ணங்கள் கோயில் முழுவதும் பூசப்பட்டுள்ளன. சிற்பங்கள், சிலைகள் நிறைந்துள்ளன.
எப்படி செல்வது: சென்னையில் இருந்து வதோதரா (பரோடா) 1746 கி.மீ., இங்கிருந்து 64 கி.மீ.,
விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
அருகிலுள்ள தலம்: அக் ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர் 140 கி.மீ., (வளமுடன் வாழ...)
நேரம்: காலை 9:00 - இரவு 7:30 மணி
தொடர்புக்கு: 079 - 2326 0001