உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: தோல்வி படத்தை வெற்றிப் படமாக்கிய சரவணன்

பிளாஷ்பேக்: தோல்வி படத்தை வெற்றிப் படமாக்கிய சரவணன்


புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தை ஏ.வி.மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்தார். முதுமை காரணமாக தனது பொறுப்புகளை மகன் சரவணனிடம் ஒப்படைத்தார். சரவணனின் நிர்வாக தயாரிப்பில் தயாரான முதல் படம் 'மாமியார் மெச்சின மருமகள்'. இந்த படம் 'கங்கர் கோ நஹாலே' என்ற மராத்தி படத்தின் ரீமேக். அங்கு பெரிய வெற்றி பெற்றதால் தனது முதல் படம் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்ற கருதி அந்த படத்தை ரீமேக் செய்தார் சரவணன். முதன் முதலில் நிர்வாக தயாரிப்பு என்று சரவணனுக்கு டைட்டில் கார்ட் போடப்பட்ட படம்.

கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.என்.ராஜம், ஜி.வரலட்சுமி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலட்சுமி ஒரு பணக்காரப் பெண்மணி. அவருக்குக் குழந்தைகள் இல்லை. தனது மருமகன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை தன் மகனாக வளர்த்து வருகிறார். மகனுக்குத் திருமணம் செய்து வைத்து ஒரு பேரப்பிள்ளையைக் காணவேண்டும் என்பது வரலட்சுமியின் ஆசை.

ஆனால் எஸ்.எஸ்.ஆர். ஏழைப் பெண்ணான எம்.என்.ராஜத்தைக் காதலிக்கிறார். வரலட்சுமி அவர்கள் திருமணம் செய்வதை விரும்பவில்லை. அத்தையின் விருப்பத்தை மீறி எஸ்.எஸ்.ஆர். ராஜத்தைத் திருமணம் செய்கிறார். வரலட்சுமி இருவரையும் வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்.

பின்னர் எம்.என்.ராஜம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். எப்படி வரலட்சுமியின் அன்பை மீண்டும் வென்றெடுத்து குடும்பம் மீண்டும் ஒன்றாகி மகிழ்ச்சியான வாழ்வுக்குத் திரும்புகிறார்கள் என்பதே படத்தின் கதை.

இந்த படம் மீடியாக்களிடமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காமெடியாக நடித்ததும், வில்லித்தனமான கேரக்டருக்கு புகழ்பெற்ற எம்.என்.ராஜம் அப்பாவி பெண்ணாக நடித்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்றார்கள்.

முதல் பட தோல்வியே ஏவிஎம் சரவணனை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த படத்திற்கு பிறகு அவர் பல வெற்றி படங்களை தயாரித்தாலும் முதல் தோல்வி அவரை துரத்திக் கொண்டே இருந்தது.

இதனால் அதே மாதிரியான ஒரு கதையை வெற்றி பெற வைத்து காட்ட வேண்டும் என்று நினைத்தார். இதனால் கங்கை அமரனை அழைத்து அந்த படத்தை காட்டி இந்த கதையை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி இயக்குங்கள் என்றார் ஆனால் கங்கை அமரன் இரண்டு நாள் யோசித்து விட்டு என்னால் முடியாது என்று மறுத்து விட்டார். பின்னர் சித்ராலயா கோபுவிடம் இதே மாதிரி இருந்த ஒரு கதையை வாங்கி 'மாமியார்' என்பதற்கு பதிலாக பாட்டி, பேரன் உறவு என்பதை மையப்படுத்தி அதனை எடுத்து பெரிய வெற்றி பெற்றார். அந்தப் படம் 'பாட்டி சொல்லை தட்டாதே'.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !