பாப்கார்ன் விலை பற்றி குரல் கொடுத்த ராம் சரண்
சினிமா தியேட்டர்களுக்கு மக்கள் வருகை என்பது கடந்த சில வருடங்களாகவே குறைந்து வருகிறது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் என்றால் அதிகமான பார்க்கிங் கட்டணம், தியேட்டர்களுக்குள் சென்ற பின் சாப்பிட நினைத்தால் தின்பண்டங்களின் விலை அநியாயமாக இருக்கிறது. இது குறித்து மக்கள் மட்டும்தான் அதிகமான குரல்களை எழுப்பி இருக்கிறார்கள்.
ஆனால், திரையுலகத்திலிருந்து யாரும் இது பற்றி எல்லாம் பேசுவதில்லை, குரல் கொடுப்பதில்லை. ஒரு குடும்பம் படம் பார்க்கச் சென்றால் குறைந்தது 2000 ரூபாய் செலவில்லாமல் படம் பார்க்க முடியாது. சாதாரண 10 ரூபாய் பாப்கார்ன் விலை 400, 500 ரூபாய் வரை மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விற்கிறார்கள். ஒரு தண்ணீர் பாட்டில் கூட 70 ரூ என்றெல்லாம் சொல்கிறார்கள். பல தியேட்டர்களில் விதிப்படி வைக்க வேண்டிய குடிதண்ணீரை வைப்பதில்லை.
இந்நிலையில் சமீபத்தில் டிவி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு நடிகர் ராம் சரண் பாப்கார்ன் விலை பற்றிப் பேசியிருக்கிறார்.
“இந்தியாவில், சினிமா இன்றும் மிக மலிவான பொழுதுபோக்கு சாதனமாகவே உள்ளது. குடும்பத்தினருடன் திரையரங்கிற்குச் சென்று, படம் குறித்துப் பேசுவது ஒரு சிறந்த கூட்டுச் செயல்பாடாகும். பாப்கார்ன் விலைகள் சற்று குறைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.