'ஜனநாயகன்' படக்குழுவினர் படம் பார்ப்பது எங்கே?
தமிழக முதல்வர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' ஒருவழியாக நாளை ரிலீஸ் ஆகிறது. தமிழகத்தில் மட்டுமே 90 சதவீதம் தியேட்டரில் வெளியாக வாய்ப்பு, ஆயிரம் திரைகளை படம் ஆக்கிரமிக்கும். மீதி திரைகளில் 'தி ஓடிஸி, கட்டாகுஸ்தி2, அன்பே டயானா' ஓட வாய்ப்பு. இதுவரை படத்துக்கு சென்னையில் எந்த விளம்பர நிகழ்ச்சியும் நடக்கவில்லை. பாடல் வெளியீட்டுவிழா கூட மலேசியாவில் நடந்தது. நேற்றும், நேற்று முன்பும் மட்டும் சில மீடியாக்களுக்கு இயக்குனர் எச்.வினோத் பேட்டி கொடுத்தார். இன்று கோயிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு விடுமுறை விட்டுள்ளார். ஜனநாயகன் படத்தை எந்த தியேட்டரிலும் தான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல், ஹீரோ விஜய், இப்போது முதல்வர் என்பதால் அவரும் தியேட்டருக்கு சென்று பார்க்க வாய்ப்பில்லை. அவர் முன்பே படத்தை பார்த்துவிட்டதாக தகவல். ஹீரோயினாக நடித்த பூஜாஹெக்டே, முக்கியமான கேரக்டரில் நடித்த மமிதா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் வெளியிடங்களில் இருப்பதால் சென்னையில் படம் பார்க்க வாய்ப்பில்லை. இசையமைப்பாளர் அனிருத் மட்டுமே நாளை காலை முதல்காட்சியை சென்னையில் பார்க்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதை அரசியல் வெறுப்பு இன்றி பார்க்க வேண்டும். படத்துடன் அரசியலை கலக்க கூடாது என்று இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே பல ஊர்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் வந்துள்ளன. அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால் புகார் தர எண் தரப்படுமா என்று நேற்று இயக்குனர் எச்.வினோத்திடம் செய்தியாளர்கள் கேட்க, அது என் வேலை அல்ல என்று அவர் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் முதல்காட்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது, பக்கத்து மாநிலங்களில் 6 மணிக்கு தொடங்குகிறது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் புக்கிங் இல்லை என்றும் கூறப்படுகிறது.