உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நார்மலைஸ் ஆக்கப்படுகிறது வன்முறை : வெள்ளித்திரையில் தெறிக்குது ரத்தக்கறை

நார்மலைஸ் ஆக்கப்படுகிறது வன்முறை : வெள்ளித்திரையில் தெறிக்குது ரத்தக்கறை

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும்
இந்த சினிமாதான்..
எம்ஜியார் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்த சினிமாதான்
கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான்
வெள்ளித்திரையில தங்கம் விளைஞ்சதும்
எங்க சினிமாதான்…

85ம் ஆண்டு வெளியான பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' படத்துக்காக இளையராஜா இசைத்து அவரே பாடிய இந்தப் பாடலை இப்போதெல்லாம் ஏக்கத்தோடுதான் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் தங்கமும், வைரங்களும் விளைந்து கொண்டிருந்த வெள்ளித்திரைகளில் சமீபகாலங்களாய் அதிகம் காண முடிவது வன்முறை வெறியாட்டம் கொண்ட ரத்தம் தெறிக்கும் சினிமாக்களைத்தான்.

ரத்த வெறி கொலைகள்

கடந்த புதனன்று ரிலீஸான பான் இந்திய படமான 'டாக்சிக்' பார்த்த ரசிகர்கள் அப்படம் தந்த அதிர்ச்சியிலிருந்து மிள வெகு நாட்கள் ஆகும். பொதுவாகவே நாயக பிம்பங்கள் உடைக்கப்பட்டு அவர்களது கெட்ட குணங்களும் சித்தரிக்கப்பட்டு வரப்படுகின்றன என்றாலும் இப்படம் ஒரு சாபம். பெண்கள் விவகாரத்தில் பொறுக்கித்தனத்தின் சிகரமாக சித்தரிக்கப்படும் அவன் செய்கிற வன்முறைகள் இதுவரை இந்திய சினிமா காணாத கொடூரம்.



மூன்றேகால் மணிநேரம் ஓடுகிற இப்படத்தில் கதாநாயகன் பண்ணும் முந்நூறுக்கும் மேற்பட்ட ரத்தவெறிக் கொலைகள் விஷுவலாக காட்டப்பட்டுள்ளன. எதிரிகளின் உடல் உறுப்புகளை வெட்டி எறியும் வெறித்தனம் நம்மை உடல் கூச வைக்கிறது. இதுபோக கதாநாயகனின் அக்கா நயன்தாரா, மற்ற முக்கிய பாத்திரங்கள் செய்யும் கொலைகளையும் சேர்த்தால் மயக்கம் வருகிறது.

2000லேயே துவங்கியது

பான் இந்தியப் படங்கள் என்கிற பெயரில் சந்தை விரிப்பு அதிகமானபோதுதான் இவ்வன்முறை சினிமாக்கள் அதிகரித்தன என்றபோதிலும் 2000த்தின் துவக்கத்திலேயே இதற்கு வலுவாக விதை போட்டவர்கள் என்று 'பருத்தி வீரன்' அமீரையும் 'சுப்ரமணியபுரம்' சசிகுமாரையும் சொல்லலாம்.



இவ்விரு படங்களிலும் வன்முறைக் காட்சிகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பருத்திவீரன் கிளைமேக்ஸ் காட்சியை அமீர் கையாண்டவிதம் நெஞ்சம் பதறவைப்பது என்றால் சுப்ரமணியபுரத்துக்காரர்கள் துரோகம் செய்த நண்பர்களின் கழுத்தை சர்வசாதாரணமாக அறுப்பதை காட்சிப்படுத்தி 'பார்த்து ரசிங்க பாஸு' என்று சகஜப்படுத்தினார்கள்.

செல்வராகவன்



இவர்களுக்கு அடுத்து முக்கிய இடத்தில் இருப்பவர் புதுப்பேட்டைக்காரரான செல்வராகவன். இப்படம் நிஜமான அரசியல் பேசிய முக்கியமான தமிழ்ப் படம் என்றாலும் இதில் இடம் பெற்ற வன்முறைக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் இன்று பார்த்தாலும் பதற வைப்பவை. அதிலும் குறிப்பாக பாலாசிங் கோஷ்டிகளிடம் தனுஷ் சேருவதற்கு முன்பு அவரது எதிர் கோஷ்டியிடம் ரத்தம் சொட்டச் சொட்ட தனுஷ் குதறியெடுக்கப்படும் காட்சி.

வெற்றிமாறன்



இந்த வரிசையில், நல்ல 'அசுரன்' 'விசாரணை' போன்ற நல்ல படங்கள் எடுக்கிற வெற்றிமாறனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. 'பொல்லாதவன்' தொடங்கி 'வடசென்னை' வரை தனது படங்களில் வலுவான வன்முறைக் காட்சிகளுக்கு இடம் கொடுத்தபடியே இருக்கிறார் வெற்றிமாறன். மட்டுமின்றி 'வட சென்னை' படத்தில் 'ஏரியா பாஷை அப்படி… நான் என்ன செய்ய முடியும் ?' என்கிற போர்வையில் அதிர்ச்சிகரமான பல கெட்ட வார்த்தைகளுக்கு அறிமுகம் தந்தார்.

ரத்தத்தை ருசிக்கும் ஹீரோக்கள்

பொறுப்பாக இருக்கவேண்டிய இவர்களே இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் எனும்போது இளைய தலைமுறையை என்ன சொல்ல முடியும். லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் வன்முறைக் காட்சிகளை ரொம்பவும் ஸ்டைலிஸாக எடுத்த வகையில் வெகு விரைவாக கமல், ரஜினிகளையே ரீச் செய்ய முடிந்தது. பழைய டைரக்டர்களிடமிருந்து விடுபட்டு இந்த புதிய காம்போக்களுடன் கைகோர்த்த 'விக்ரம்' கமல், ஜெயிலர்' ரஜினியும் கூட தங்கள் படங்களில் வன்முறை காட்சிகளுக்கு பஞ்சம் வைக்கவில்லை. பல முன்னணி கதாநாயகர்கள் எதிரிகளைப் பதம் பார்த்த தங்கள் ஆயுதத்தில் இருக்கும் ரத்தத்தை நாக்கில் தடவி ருசி பார்க்கும் அளவுக்கு வன்முறையை நார்மலைஸ் ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்பதே கொடூரமான யதார்த்தம்.



இந்தப் பட்டியலில் மறந்தும் மிஸ் செய்துவிடக்கூடாத ஒருவர் அருண் மாதேஸ்வரன். 'ராக்கி', 'சாணி காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'டி.சி' ஆகிய நான்கு படங்களை இயக்கியிருக்கிறார் இவர். இந்த நான்கு படங்களிலும் ரத்தம் தெறிக்கும் வன்முறைதான் இவரது முதல் டார்கெட். இந்த 4 படங்களில் அறுத்து, வெட்டி, சுட்டுக் கொல்லப்பட்ட கதாபாத்திரங்கள் தலா 250 என்று வைத்துக் கொண்டாலும் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். லேட்டஸ்டாக ரிலீசான டி.சியும் 100 கோடிக்கு மேல் வசூலித்த வெற்றிப்படம் என்பதால் இன்று இவரும் ஒரு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்.

இந்த வெற்றிகள் என்ன செய்யும் ?

தங்கள் படங்களின் வெற்றிக்குக் காரணன் நாம் காட்டிய வன்முறைக் காட்சிகள் தான் என்று இயக்குநர்கள் நினைக்க அவை மேலும் மேலும் அதிகரிக்கும். சென்சார்காரர்கள் இதுபோன்ற பெரிய ஆட்களின் படங்களைப் பார்க்கும்போது மட்டும் ஆழ்ந்து உறங்கி விடுவார்கள் போல. ஸோ இந்த நிலை தொடர்ந்தால்… இனி வெள்ளித்திரையில தங்கம் விளைஞ்சதும் எங்க சினிமாதான் என்று பாடுவதற்குப் பதிலாக வெள்ளித் திரையில ரத்தம் தெறிக்கிற எங்க சினிமாதான் என்று பாடிக் கொள்ள வேண்டியது தான்.



இதற்கிடையே ஒரு ஆறுதல் செய்தியாக, 750 கோடி பட்ஜெட்டில் தயாராகி 2000 கோடி அள்ள பேராசை கொண்ட 'டாக்சிக்' படத்தை மக்கள் அனைத்து மொழிகளிலும் படு தோல்வி அடையச் செய்திருக்கிறார்கள். இந்த நிராகரிப்பு தொடர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !