PUBLISHED ON : செப் 26, 2025 12:00 AM

'வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தாமல், அவதுாறு செய்வதற்கு பயன்படுத்துகின்றனரே...' என, காங்கிரஸ் கட்சியினரை பார்த்து, கவலையுடன் கூறுகிறார், மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கஜேந்திர சிங் ஷெகாவத்.
சமீபத்தில் டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, கஜேந்திர சிங் ஷெகாவத் பேசினார்.
அப்போது அவர், 'சமீபகாலமாக காங்கிரஸ் தகவல் தொழில் நுட்ப அணியினர், ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர். அதில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில், பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாய் ஆகியோரை மையமாக வைத்து, சில காட்சிகளை த யாரித்துள்ளனர்.
'அந்த வீடியோவில் பிரதமரை பற்றியும், அவரது தாயை பற்றியும் அவதுாறான கருத்துகளை சித்தரித்துள்ளனர். அற்ப அரசியல் காரணங்களுக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்...' என்றார்.
நிகழ்ச்சி முடிந்த பின்னும் கூட, இந்த விஷயத்தை பற்றி அங்கு வந்திருந்தவர்களிடம், தன் கவலையை பகிர்ந்து கொண்டார், ஷெகாவத். 'ஓட்டு வாங்குவதற்கும், பதவி பெறுவதற்கும் எவ்வளவோ வழிகள் உள்ளன. இது போன்ற அவதுாறு பிரசாரம் தேவைதானா...' என, புலம்பியபடியே புறப்பட்டு சென்றார், ஷெ காவத்.