PUBLISHED ON : ஜூலை 06, 2025

ஒரு நிமிடத்திற்கு, 4.5 லட்சம் தோட்டாக்களை வெளியேற்றக் கூடிய, புதிய ரக துப்பாக்கியை, சீனா உருவாக்கி வருகிறது.
இந்த அதிரடியான துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, 'ஹைப்பர்சானிக்' ஏவுகணைகளையும் இடைமறித்து தாக்க முடியும் என்ற தகவல், சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே, மிகவும் சக்தி வாய்ந்த இயந்திர துப்பாக்கி எனவும் கூறப்படுகிறது.
உலகின் முதன்மை வல்லரசு நாடான, அமெரிக்காவிடம் உள்ள துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அதிகபட்சமாக நிமிடத்திற்கு, 4,500 தோட்டாக்களை மட்டுமே வெளியேற்ற முடியும். ஆனால், தற்போது சீனா தயாரிக்கும் புதிய ரக துப்பாக்கிகள், அமெரிக்கத் துப்பாக்கிகளை விட, 100 மடங்கு சக்தி வாய்ந்தவையாக இருக்குமாம்.
சக்தி வாய்ந்த இந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்புவது, முதலில் சவாலாக கருதப்பட்டது. இருப்பினும், சீனப் பொறியியல் வல்லுனர்கள், பீப்பாய்களைப் பயன்படுத்தித் தோட்டாக்களை நிரப்பும் வழிமுறையை கண்டறிந்து உள்ளனர்.
நிமிடத்திற்கு, 4.5 லட்சம் தோட்டாக்களை வெளியேற்றும் ஆயுத தொழில்நுட்பம், ஆஸ்திரேலிய நாட்டில் தோன்றியதாக கூறப்படுகிறது. 2006ல், 10 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கி, அந்த தொழில்நுட்பத்தை, சீனா பெற்றுக் கொண்டது.
பலகட்ட ஆராய்ச்சிக்குப் பின், சீனா தற்போது, இந்த அதிரடியான இயந்திர துப்பாக்கியை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— ஜோல்னாபையன்