PUBLISHED ON : ஜூலை 06, 2025

அந்த நாலு பேருக்கு பயந்து
ருசியாய் உண்ணவோ
சுதந்திரமாய் சுவாசிக்கவோ
முடியவில்லை!
தந்திரமாய் பேசவோ
'டிரெண்டி'யாய் உடை அணியவோ
சிகையை நவீனமாக்கவோ
முடியவில்லை!
சொந்த வாகனத்துடன் 'செல்பி' எடுக்கவோ
எதிர்பாலருடன் பேசி சிரிக்கவோ
காதலை பறைசாற்றவோ
முடியவில்லை!
நட்புகளுடன் சுற்றி திரியவோ
சொந்தங்களுடன் உறவாடவோ
உடல் பெருக்கவோ இளைக்கவோ
முடியவில்லை!
சதா நேரமும் நம்மை கண்காணித்து
வாழ்வின் நிம்மதியை பறிக்கும்
சர்வ வல்லமை படைத்த
அந்த நாலு பேர் யார்?
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
யாரிடமும் கேட்டும் பயனில்லை
வீட்டிலும் விடை கிடைக்கவில்லை
வெளியிலும் சுட்டிக்காட்ட யாருமில்லை!
இறுதியில் கடவுளிடமே கேட்டேன்
தெய்வமே என் நிம்மதியை கெடுக்கும்
மகிழ்ச்சியை மங்க செய்யும்
அந்த நாலு பேர் யார் என்று!
தெய்வீக சிரிப்புடன் கடவுள் சொன்னார்...
மானிடர்களை கண்காணிக்க
நான் நியமித்த அந்த நால்வரில்
நீயும் ஒருவன் என்பதை அறிந்து கொள்!
—ஆர்.ஹரிகோபி, டில்லி.