/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - சர்க்கரைவல்லி கிழங்கு!
/
நம்மிடமே இருக்கு மருந்து - சர்க்கரைவல்லி கிழங்கு!
PUBLISHED ON : மார் 10, 2024

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சர்க்கரைவள்ளிக் கிழங்கு உதவுகிறது. இது, ருசியாக இருப்பதுடன், சத்துக்களும் நிறைந்துள்ளது.
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது உடலை சூடாக வைத்திருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதில் உள்ள சத்துக்கள், பல நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
உடலின் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் சர்க்கரைவள்ளி கிழங்கை வயது வித்தியாசமில்லாமல் சாப்பிடலாம். பொதுவாக, கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
வைட்டமின் சி நிறைந்துள்ள இது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வாயு, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். குளிர் காலத்தில் உடல் எடையை குறைக்க விரும்பினால், உணவில் சர்க்கரைவள்ளி கிழங்கு சேர்க்கலாம். இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால், மீண்டும் மீண்டும் பசி எடுக்காமல் இருப்பதோடு, அதிகமாக உண்பதில் இருந்தும் தப்பிக்கலாம்.
சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வையை மேம்படுத்தவும், கண்களை ஆரோக்கியாமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதை தொடர்ந்து உட்கொள்வதால், கண் தொடர்பான நோய் அபாயத்தைக் குறைக்கலாம். இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில், பொட்டாசியம் ஏராளமாக உள்ளது. இது, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
குளிர்காலத்தில், சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில், நன்மைகளுக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.
- ம.செவ்வந்தி