/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பயறு விதைகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி
/
பயறு விதைகளின் தரத்தை மேம்படுத்துவது எப்படி
PUBLISHED ON : மார் 19, 2025

பயறு வகைப் பயிர்களில் விதைத்தரத்தை மேம்படுத்தும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பத்தை விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
விதைகளை வெயிலில் உலர்த்தி 9 சதவீத ஈரப்பதத்திற்கு குறைவாக பராமரிக்கவேண்டும். ஈரப்பதத்தை சரியாக பராமரித்தால் விதைகளை நீண்ட காலத்திற்கு சேமிக்க இயலும். உலர்ந்த கோணிச் சாக்குகளை பயன்படுத்த வேண்டும். சேமிக்கும் கிடங்குகள் அல்லது அறைகளின் சுவரை ஒட்டாமலும் ஜன்னல் பகுதிக்கு அருகில் இல்லாமலும் பயறு மூடைகளை அடுக்கவேண்டும்.
தரைப்பகுதியில் நேரடியாக அடுக்கக்கூடாது. மரச்சட்டம் அல்லது பிளாஸ்டிக் சட்டத்தின் மீது 5 முதல் 6 வரிசை உயரத்திற்கு மட்டுமே அடுக்கவேண்டும். 'புருச்சீட்' எனும் பயறு வண்டுகள் விதைகளை அதிகளவில் தாக்குகிறது. மேலும் சில பூஞ்சாணம், பேன் இனங்களும் தாக்குகிறது.
இதனால் விதையின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதோடு எடைகுறைந்து பயன்படுத்த முடியாமல் போகிறது. சேமிக்கும் அறைகளை சுத்தமாகவும் காற்றோட்டமாக பராமரிக்க வேண்டும். விதைகளை கரடான பரப்பு கொண்ட செங்கல்துாள், செம்மண், மரத்துாள் கலந்தோ எண்ணெய் போன்ற திரவங்களை தடவியோ வைக்கலாம். விதைகளை சேமிக்கும் முன் 60 டிகிரி வரையிலான செல்சியஸ் வெப்பத்திற்கு உட்படுத்தி பூச்சிகளின் முட்டைகளை அழிக்க வேண்டும். சேதாரமற்ற சுத்தமான விதைகளை பிரித்து சேமிப்பதன் மூலம் விதையின் முளைப்புத் திறன் உயர்ந்து லாபம் ஈட்டலாம்.
விதையின் ஈரப்பத அளவை தெரிந்து கொள்ள அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை மையங்களை விவசாயிகள் அணுகலாம்.
-மகாலெட்சுமி, விதைப் பரிசோதனை அலுவலர்
சாய்லெட்சுமி சரண்யா, வேளாண் அலுவலர்
விதைப் பரிசோதனை மையம், விருதுநகர்
அலைபேசி: 98944 21833