ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை விண்ணப்பிக்க அரசு அழைப்பு
ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை விண்ணப்பிக்க அரசு அழைப்பு
ADDED : செப் 26, 2025 01:10 AM

சென்னை:தமிழகத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், அரசின் சலுகைகளை பெற விண்ணப்பிக்கலாம் என வழிகாட்டி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க, அரசு பல சலுகைகளை வழங்குகிறது. ஒரு ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்டதை விட, அடுத்த ஆண்டில் 10 சதவீதம் அதிகம் ஏற்றுமதி செய்தால், ஆண்டுக்கு 1.80 கோடி ரூபாய் வரை சம்பள பட்டியல் மானியம் வழங்கப்படுகிறது.
சர்வதேச தரச்சான்றுகள் பெறுவதற்கான செலவில் 50 சதவீதம், 2 கோடி ரூபாய் வரை அரசு திரும்ப வழங்குகிறது. ஏற்றுமதி சந்தைப்படுத்துதலுக்கான செலவில், ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
தற்போது, அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பால், ஏற்றுமதியாளர்கள் இடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு, அரசின் சார்பில் ஏற்றுமதி செய்ய வழங்கப்படும் சலுகைகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த பணிகளை கவனிக்க, வழிகாட்டி நிறுவனத்தில் இரண்டு அதிகாரிகள் உள்ளனர். எனவே, கூடுதல் விபரங்களை பெற, 'exports@investtn.in' மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.