ADDED : செப் 25, 2025 11:57 PM

ஆ ப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 அண்மையில் வெளியிடப்பட்ட போது, அதை வாங்க கடைகளில் எக்கச்சக்கமான கூட்டம். மும்பையில் அடிதடி லெவலுக்கு போனது. இது குறித்து என்ன நினைக்கிறார் என நிதி ஆலோசகர் வ.நாகப்பனிடம் கேட்டபோது:
இதில் சந்தோஷமான விஷயம், இந்திய தொழிற்சாலைகளில், இந்திய உழைப்பாளிகள் கையால் உருவாக்கப்பட்ட போன் என்பதும்; போட்டி போட்டு வாங்கக்கூடிய வசதிக்கு இந்தியர்கள் வந்திருக்கின்றனர் என்பதும் தான்.
கவலை தரும் விஷயம், தங்களுடைய அறிவால்; திறமையால் மற்றவர்களை கவர முடியாதவர்கள், இப்படி பொருட்களால் கவர நினைக்கின்றனரா என்பது.
முதல் நாளில் வாங்கினால் பெரிய அளவில் சலுகை கிடைக்கும் என்றால் பரவாயில்லை. நான் பார்த்தவரைக்கும் அந்த மாதிரியான எந்த விளம்பரமும் இல்லை.
பலர், நிச்சயமாக இ.எம்.ஐ.,யோ, கடனோ வாங்கித் தான் வாங்க வந்திருப்பர். விலை ஏறாமல், தேயும் ஒரு பொருளை, கடன் வாங்கி பெற வேண்டியதில்லை. எதற்கு விலை ஏறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதோ, அதற்கு கடன் வாங்கி வாங்கலாம்.
ஏனெனில், கடன் மீதான வட்டியை விட, பொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும். எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன், ஒருமுறை இந்த கோணத்தில் யோசித்து வாங்குவது நல்லது.
நாகப்பன்,
நிதி ஆலோசகர்