அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரம்; கெஜ்ரிவால் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு
அரசு நிதியை தவறாக பயன்படுத்திய விவகாரம்; கெஜ்ரிவால் மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு
ADDED : மார் 28, 2025 02:17 PM

புதுடில்லி: அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தி பெரிய விளம்பர பலகைகளை நிறுவியதாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை டில்லி போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
டில்லியில் முதல்வர் ரேகா குப்தா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்தது. டில்லியின் துவாரகா பகுதியில், அரசு நிதியை தவறாக பயன்படுத்தி, ஆம் ஆத்மிக்கு விளம்பரம் ஏற்படுத்தும் நோக்கில், பெரிய அளவில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., குலாப் சிங், துவாரகா கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அதாவது அரசு நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும், அவற்றை விளம்பரம் செய்ய அதிகம் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில், அரவிந்த் கெஜ்ரிவால், குலாப் சிங், நிதிகா சர்மா ஆகியோர் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடக் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, மூவர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது பொது சொத்துரிமைச் சட்டத்தை மீறியதாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்த அறிக்கையை போலீசார் கோர்ட்டில் சமர்பித்தனர். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப்.,18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே, மதுபான கொள்கை முறைகேடு செய்ததாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், தற்போது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.