எமர்ஜென்சி கால நினைவுகள் என்றும் மறையாது: அமித்ஷா
எமர்ஜென்சி கால நினைவுகள் என்றும் மறையாது: அமித்ஷா
UPDATED : ஜூன் 25, 2025 06:17 PM
ADDED : ஜூன் 24, 2025 10:17 PM

புதுடில்லி: '' எமர்ஜென்சியின் போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கை விளைவிக்கும் '' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50 வது ஆண்டு தினத்தை நாம் நினைவு கூர்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது ஏன் விவாதிக்க வேண்டும் என கேள்விகள் எழலாம். 50 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் நடந்த நிகழ்வு ஒன்றின் முடிவு நல்லது அல்லது கெட்டதாக இருந்தாலும், அதன் நினைவுகள் சமூகத்தில் இருந்து மாறாது. ஜனநாயகத்தை உலுக்கிய எமர்ஜென்சி போன்ற நிகழ்வுகளின் நினைவுகள் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டால், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்.
சர்வாதிகாரத்தை ஒருவராலும் பொறுத்து கொள்ள முடியாத காரணத்தினால் எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது. இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாய். எமர்ஜென்சியை யாரும் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதில், சர்வாதிகாரிகள் மற்றும் அதனால் பலனடைந்த சிறு குழுக்கள் மட்டுமே ஆதரித்தன.
இதனை யாரும் எதிர்க்கவில்லை என்று நினைத்தார்கள். ஆனால், எமர்ஜென்சிக்கு பிறகு நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சி இல்லாத ஆட்சி அமைந்து மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார்
எமர்ஜென்சியை ஒரு வார்த்தையில் விவரிக்க முடியாது. இதற்கான எனது விளக்கமானது,' ஒரு ஜனநாயக நாட்டில், பல கட்சி ஜனநாயகத்தை சர்வாதிகாரத்திற்கான சதித்திட்டம் ' என்பதாகும்.
நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது, எனக்கு 11 வயது தான் இருந்தது . இதன் தாக்கம், குஜராத்தில், ஜனதா கட்சி ஆட்சி காரணமாக, குறைவாக இருந்தது. அந்த ஆட்சி கவிழ்ந்த பிறகு, நிலைமை மாறியது. எனது கிராமத்தில் மட்டும் 184 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த நாட்களை எனது வாழ்நாளில் மறக்க மாட்டேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.