ஜனநாயகத்தை கொலை ராகுலின் முன்னோர் முதல்வர் ரேகா குப்தா குற்றச்சாட்டு
ஜனநாயகத்தை கொலை ராகுலின் முன்னோர் முதல்வர் ரேகா குப்தா குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 25, 2025 09:41 PM

புதுடில்லி:“ராகுலின் முன்னோர்கள் நம் நாட்டின் ஜனநாயகத்தை கொலை செய்தவர்கள்,”என, முதல்வர் ரேகா குப்தா பேசினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சிக்காலத்தில், 1975ம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. எந்த விசாரணையும் இன்றி, எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவசர நிலையின், 50 வது ஆண்டு தினத்தை நினைவுகூரும் கண்காட்சியை, முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
காங்கிரஸ் எம்.பி., ராகுலின் முன்னோர்கள் நம் நாட்டில் ஜனநாயகத்தை கொலை செய்தவர்கள். ஆனால், அந்தக் குடும்பம்தான் இப்போது ஜனநாயகத்தை மீட்க வந்திருப்பது போல பேசிக்கொண்டிருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் கழுத்தை நெரித்தவர் இந்திரா. அவருடைய பேரன் ராகுல், அரசியலமைப்பின் நகலை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற அழைப்பு விடுக்கிறார்.
அவசரநிலைக் காலத்தில், எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டதையும், அவர்களின் குடும்பங்கள் 21 மாதங்கள் தவித்ததையும் என்றுமே மறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், ஜனசங்க முன்னாள் தலைவர் பால்ராஜ் மதோக் உட்பட எதிர்கட்சித் தலைவர்களை தடுப்புக் காவலில் கைது பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நகல் உட்பட அவசரநிலை காலத்தின் முக்கிய ஆவணங்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன.
மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், டில்லி கலாசார துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா உட்பட பலர் பங்கேற்றனர்.
அவசரநிலையின், 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பா.ஜ., சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளன.