2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: கவர்னர் ரவி
2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: கவர்னர் ரவி
UPDATED : ஏப் 02, 2025 12:00 AM
ADDED : ஏப் 02, 2025 09:11 AM

திருச்சி:
வரும் 2047ல் சுதந்திர தின நுாற்றாண்டு விழா கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும் என ஐ.ஐ.எம்., பட்டமளிப்பு விழாவில், தமிழக கவர்னர் ரவி பேசினார்.
திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகமான, ஐ.ஐ.எம்.,மில், ஆட்சி மன்றக்குழு தலைவர் ஜலாஜ் தானி தலைமையில், 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழக கவர்னர் ரவி, மாணவ - மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசியதாவது:
பத்தாண்டுகளுக்கு முன் வரை, இந்தியாவை உலக நாடுகள் கண்டுகொள்ளவே இல்லை. மிகவும் ஏழ்மையான, வளராத நாடாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறி, புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்துள்ளது.
கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன், பொருளாதாரத்தில் உலகின் முதல் நாடாக இருந்த இந்தியா, காலனி ஆதிக்கத்திற்கு பின், மிகவும் பின்னோக்கி சென்றது.
தற்போது, பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக உள்ளது. எல்லா தளங்களிலும் இந்தியா வளர்ந்து வருகிறது. பத்தாண்டுகளில், 25 கோடி மக்கள் வறுமை கோட்டில் இருந்து மேலே வந்துள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், கிராமப்புற பெண்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.
வரும், 2047ல் சுதந்திர தின நுாற்றாண்டு விழா கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம். இளைஞர்கள் வளர்ச்சி என்பது உடல் ரீதியாக, அறிவு ரீதியாக, ஆன்மிக ரீதியாக இருக்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மாறி வரும் உலகில் அப்டேட்டாக இருக்க வேண்டும். பாரத நாடு ஒரு ராஷ்ட்டிரம். ராஷ்ட்டிரம் என்பது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. அதை விவேகானந்தரின் புத்தகங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். நம் நாட்டில், பெண்கள் முன்னேற்றத்துக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.