UPDATED : மார் 17, 2024 12:00 AM
ADDED : மார் 18, 2024 09:18 AM
சென்னை:
சென்னையில் 2025 ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள், இரண்டாம்உலகத் தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பான முறையில் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின்அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:
தமிழ் மொழி, தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, பண்பாடு, உயர்ந்த சிந்தனை, இலக்கிய தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும்.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற, கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழக அரசு தனிப்பெரும் நிலையில், தகுதி வாய்ந்த தமிழறிஞர்களுக்கு, பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. நாடறிந்த தமிழறிஞர்களின் நுால்களை நாட்டுடைமையாக்குகிறது.பண்டைய தமிழர் பண்பாட்டையும், பழங்கால தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில், கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக, பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது, தமிழ் பண்பாட்டின் மணிமகுடங்களாகும்.பல்வேறு துறை சார்ந்த பாடநுால்களை, தமிழில் மொழி பெயர்க்கும் பெரும் பணியை செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவை போற்றும் வகையில், கணித்தமிழ் மாநாடு நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும், வனப்போடும் வளர்த்தெடுக்கும் அரசின் முயற்சிகளாகும்.உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அயலகத் தமிழர் தினமாக, ஜன., 12ம் தேதி, தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக வைத்து, இந்த ஆண்டு அயலகத் தமிழர் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நம் உயிர்க்கு இணையான, தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், இரண்டாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, சென்னையில் 2025ம் ஆண்டு ஜூனில் ஐந்து நாட்கள் சிறப்போடும், சிந்தனை செயல்திறத்தோடும், மாபெரும் அளவில் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.