ம.தி.மு.க.,வினருக்கு தி.மு.க., வலை; கூட்டணியில் இருந்து கழற்றி விட திட்டம்
ம.தி.மு.க.,வினருக்கு தி.மு.க., வலை; கூட்டணியில் இருந்து கழற்றி விட திட்டம்
ADDED : ஜூன் 25, 2025 04:37 AM

தி.மு.க., கூட்டணியில், 12 தொகுதிகள் பெறுவது அல்லது கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விவாதிக்க, வரும், 29ம் தேதி ம.தி.மு.க., நிர்வாகக் குழுக் கூட்டம், சென்னையில் அவசரமாக கூடும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், ம.தி.மு.க., முன்னாள் மாவட்டச்செயலர் முத்துரத்தினம் உள்ளிட்ட சில நிர்வாகிகள், திடீரென தி.மு.க.,வில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஈரோட்டில், ம.தி.மு.க., பொதுக்குழு நடந்தது. பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ பங்கேற்றனர்.
கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில், தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் உள்ளிட்ட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'கடந்த சட்டசபை தேர்தலில், ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., இம்முறை, 12 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே, கட்சியினரின் விருப்பம்' என, துரை வைகோ கூறி வருகிறார்.
இதை மையமாக வைத்து, பொதுக்குழுவில் பேசிய சிலர், தி.மு.க., தலைமைக்கு சவால் விடும் விதமாக பேசியுள்ள தகவல், உளவுத்துறை வாயிலாக, ஆளுங்கட்சி மேலிடத்திற்கு தெரியவந்துள்ளது. அந்த பேச்சு, ஆளும் கட்சி மேலிடத்தை அதிருப்தி அடைய வைத்து உள்ளது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ம.தி.மு.க.,வில் அதிருப்தியில் உள்ளவர்களை தேடிப்பிடித்து, தி.மு.க.,வில் சேர்க்க பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பூர் புறநகர் மாவட்ட ம.தி.மு.க., முன்னாள் செயலரும், உயர்மட்டக் குழு உறுப்பினருமான முத்துரத்தினம் தலைமையில் ரமேஷ், ரவி என்ற தர்மலிங்கம், கே.குமார் ஆகியோர், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, தி.மு.க.,வில் இணைந்தனர்.
இது தொடர்பாக, தி.மு.க., வெளியிட்ட அறிக்கையில், ம.தி.மு.க., நிர்வாகிகள் என குறிப்பிடாமல் மாற்று கட்சியினர் என்றே சொல்லப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
கூட்டணி தர்மம் கருதி, ம.தி.மு.க., அதிருப்தியாளர்களை சேர்க்காமல் இருந்தோம். 12 தொகுதிகள் கேட்டு நெருக்கடி தருவதுடன், பா.ஜ.,விடம் ரகசிய உறவு வைத்து, மத்திய அமைச்சர் பதவிக்கு பேரம் பேசுவது தெரிந்ததும், ம.தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட தயாராகி விட்டோம்.
'ஏன் கூட்டணியை விட்டு வெளியே வரக் கூடாது. நாங்கள் கூட்டணியினர் தானே தவிர அடிமைகள் அல்ல' என, பொதுக்குழுவில் ம.தி.மு.க.,வினர் பேசியுள்ளனர்; அரங்கமே கைத்தட்டி வரவேற்றுள்ளது.
'அதனால், அக்கட்சி இனிமேலும் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -