தமிழக முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: ரங்கசாமி வேதனை
தமிழக முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எனக்கு இல்லை: ரங்கசாமி வேதனை
ADDED : மார் 26, 2025 05:41 AM

புதுச்சேரி : ''மாநில அந்தஸ்து பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்'' என, முதல்வர் ரங்கசாமி ஆதங்கத்துடன் கூறினார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது, புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வருவது குறித்து சூடான விவாதம் நடந்தது.
அசோக்பாபு (பா.ஜ): புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தும் திட்டம் எந்த அளவில் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: ஜூன் மாதம் தொழிற்சாலைகளுக்கு நிலம் பிரித்துக் கொடுக்கப்படும். முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆனால், யார் வருவர் என தெரியவில்லை.
அசோக்பாபு: புதுச்சேரியில் ஏராளமான நிறுவனங்கள் தொழில் துவங்க ஆர்வமாக உள்ளன.
முதல்வர் ரங்கசாமி: அப்படியெல்லாம் இதுவரை புதுச்சேரிக்கு எந்த தொழிற்சாலையும் வரவில்லை. நமது மாநில எல்லையில் உள்ள தமிழகப் பகுதிகளான வானுார், இரும்பையில் பல தொழிற்சாலைகளை பார்க்க முடிகிறது. அதுவும் எவ்வளவு சீக்கிரத்தில் வருகிறது. அந்த அளவிற்கு அவர்களுக்கு உள்ள அதிகாரம் தான் முக்கிய காரணம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டிற்குச் சென்று, பல தொழில்முனைவோரை சந்தித்து தொழிற்சாலை துவங்க அழைப்பு விடுத்தார். அவர்களும், தமிழக முதல்வரை நேரில் பார்க்கின்றனர். உடனடியாக முடிவு எடுத்து, அனுமதி கொடுக்கின்றனர்.
அதனால், தமிழக எல்லைகளில் தொழிற்சாலைகள் வந்துள்ளன. ஆனால், இங்கு அதுமாதிரி எந்த அதிகாரமும் முதல்வருக்கு கிடையாது. அதாவது தமிழக முதல்வருக்கு இருக்கும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை. இங்கு ஒரு தொழிற்சாலை துவங்க அனுமதி பெறுவது எவ்வளவு கடினமாக உள்ளது என எல்லோருக்கும் தெரியும்.
இதனால்தான் ஒற்றைச்சாளர முறையை கொண்டு வந்தோம். தொழிற்சாலைகள் துவங்கிவிட்டு, 3 மாதத்தில் அனுமதி பெறலாம் எனக் கூறினோம். நமது மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க, மத்திய அரசின் அனுமதி கேட்க வேண்டியுள்ளது. மின் இணைப்பு பெறவே, தொழிலதிபர்கள் கஷ்டப்படுகின்றனர்.
இதற்கு அரசு நிர்வாகம்தான் காரணம். தொழிற்சாலைகளை அனுமதிப்பது தொடர்பாக, தலைமை செயலர் முடிவெடுத்தால் தான் அந்த கோப்பு நம்மிடம் வரும். இதனால்தான், மாநில அந்தஸ்து அவசியம் எனக் கேட்டு வருகிறோம். இதை எனக்காக நான் சொல்லவில்லை. எதிர்காலத்தில் யார் வந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக கேட்கிறோம்.
மாநில அந்தஸ்து பெறாவிட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுச்சேரி பின்தங்கிய நிலையில் தான் இருக்கும்; இதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.