சீமானுடன் பேச்சு; கூட்டணி சேர அழைப்பு: தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி
சீமானுடன் பேச்சு; கூட்டணி சேர அழைப்பு: தனி அணி அமைக்க ராமதாஸ் புது முயற்சி
ADDED : ஏப் 26, 2025 02:03 AM

வரும் சட்டசபை தேர்தலில், வெற்றி கூட்டணியில் இடம்பெற வேண்டும் அல்லது வெற்றியை கட்டமைக்கும் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உறுதியாக உள்ளார்.
ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் சேர்வதையே, அன்புமணி விரும்புகிறார். அதேநேரம் தி.மு.க., தலைமையிலான கூட்டணியே வலுவானது எனக் கருதுகிறார் ராமதாஸ். அவரது ஆதரவாளர்களும், அதையே வலியுறுத்துகின்றனர்.
சட்டசபையில், கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன், அதை வலியுறுத்திப் பேசியவர்களில், பா.ம.க.,வைச் சேர்ந்த ஜி.கே.மணியும் ஒருவர்.
ராமதாஸ் ஆசி இல்லாமல், அவர் பேசியிருக்க முடியாது என்கின்றனர், ஆளுங்கட்சியினர்.
இதற்கிடையில், பா.ம.க., வட்டாரத்தில், இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. நடிகர் விஜய், சீமான் ஆகியோருடன் இணைந்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக புதிய அணி அமைக்கும் முயற்சியில், ராமதாஸ் தற்போது அதிக ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
சீமானுடன் தொலைபேசியில் பேசியுள்ள ராமதாஸ், தன்னுடைய திட்டம் குறித்து விரிவாகக் கூறியுள்ளார்.
சீமானிடம் ராமதாஸ் கூறியுள்ளதாவது:
தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள். ஆனால், அந்த முடிவு வெற்றி தராது. கூட்டணி பலம்தான் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, புது அணி உருவாக்கினால், ஆட்சியைக் கைப்பற்றலாம்.
வட மாவட்டங்களில் எங்களுடன் நீங்கள் இணைந்தால், நாம் போட்டியிடுகிற தொகுதிகளில், 100 சதவீதம் வெற்றி உறுதி. நாம் தமிழர் கட்சியில் இளைஞர்கள் பலம் இருப்பதுபோல, பா.ம.க.,விலும் வன்னியர் சமுதாய இளைஞர்களின் படைபலம் அதிகம்உள்ளது.
இளைஞர்களின் பலத்தைக் காட்டும் பா.ம.க., இளைஞரணி மாநாட்டுக்கு நீங்கள் வர வேண்டும். வேளாண் நிழல் பட்ஜெட் தயாரித்ததும், உங்களுக்கு அனுப்பி வைத்தேன்.
அதில் உள்ள நல்ல திட்டங்களை பாராட்டியதை, நான் மறக்கவில்லை. எனவே, வரும் சட்டசபை தேர்தலில், ஆட்சி அதிகாரத்தைப் பெறவும், அதிகார பகிர்வு கிடைக்கவும், நாம் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும்.
இவ்வாறு சீமானிடம் ராமதாஸ் பேசியதாகக் கூறப்படுகிறது
- நமது நிருபர் -.