திருமண விழாவில் வைகோ அபசகுன பேச்சு: மணமக்கள் குடும்பம், உறவினர்கள் அதிர்ச்சி
திருமண விழாவில் வைகோ அபசகுன பேச்சு: மணமக்கள் குடும்பம், உறவினர்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 26, 2025 01:59 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., ரவிசந்திரன் இல்ல திருமணம் நேற்று நடந்தது. ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பேசினார். அவருடைய பேச்சால், மணமக்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
நல்ல பொருத்தம்
வைகோ பேசியதாவது:
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் என்னை சந்திக்க வேண்டும் என தலைகீழாக நின்றார். ஆனால், ஒரு நிமிடம் கூட அவரை சந்திக்க மாட்டேன் என்று மறுத்து விட்டேன்.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து வெளியே அனுப்பிய பங்கு, எனக்கும் ம.தி.மு.க.,வுக்கும் தான் உண்டு.
தற்போது விவாகரத்து அதிகரித்து வருகிறது. கோவில்பட்டி, சாத்துார் பகுதிகளில் விவாகரத்து ரொம்பவும் அதிகமாக உள்ளது.
நாடு தற்போது பதற்றமான நிலையில் உள்ளது. இங்குள்ள மணமக்கள் இருவருக்கும் நல்ல பொருத்தம்.
படிப்பிலும், அழகிலும் கூட பொருத்தமான ஜோடி. இதேபோல, மாலையும், கழுத்துமாக தேனிலவிற்கு சென்ற 4 தம்பதிகள் காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டுஉள்ளனர்.
காஷ்மீரில், பயங்கரவாதிகள் சுடுவதற்குமுன், ஹிந்துவா, முஸ்லிமா என கேட்டுள்ளனர். அதை வெளியில் சொல்லக்கூடாது. இதனால், முஸ்லிம்களின் மீது ஹிந்துக்களுக்கு பகை உணர்வு ஏற்படலாம்.
உணவு பஞ்சம்
இந்தியாவில் விவசாயிகள் நொறுங்கிப் போய் உள்ளனர். அவர்கள் முதுகெலும்பும் நொறுங்கிப் போய் உள்ளது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தினால் அழிந்துபோன விவசாய குடும்பங்கள் ஏராளம்.
தயவு செய்து விவசாய நிலங்களை விற்பனை செய்ய வேண்டாம். உலகத்தில் உணவுப் பஞ்சம் வரவுள்ளது. அப்போது விவசாயிகளை எல்லோரும் தேடுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.