/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணப்பட்டு தாங்கல் ஏரி: துார்வார நடவடிக்கை தேவை
/
மணப்பட்டு தாங்கல் ஏரி: துார்வார நடவடிக்கை தேவை
ADDED : அக் 20, 2025 10:27 PM

பாகூர்: மணப்பட்டு தாங்கல் ஏரியை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளால், நீர் வாழ் உயிரினங்களும், பறவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாகூர் - கன்னியக்கோவில் சாலையில், மணப்பட்டு தாங்கல் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலமாக அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தாமரை பூக்கள் அலங்கரித்து வந்த இந்த ஏரி, நீர் காக்கை, நீர் கோழி உள்ளிட்ட ஏராளமான பறவையினங்களின் வசிப்பிடமாகவும் திகழ்ந்து வந்தது. பொதுப் பணித்துறை நீர்பாசன பிரிவின் பராமரிப்பில் இருந்து வரும் இந்த ஏரி, பல ஆண்டுகளாக முறையாக பராமறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
இதனால், ஏரியின் மதகுகள், உபரி நீர் வெளியேறும் பகுதியில் உடைந்து, அதன் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவது தொடர் கதையாக உள்ளது. ஏரியில் இருந்த தாமரை செடிகள் முற்றிலும் அழிந்து , தற்போது முழுமையும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பில் உள்ளதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. நீர்பரப்பு முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளதால், தண்ணீரில் சூரிய வெளிச்சம்பட்டு ஒளிச்சேர்க்கை நடைபெறுவது தடைப்பட்டுள்ளது. இதனால், அங்கு வாழும் மீன், நண்டு, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்களும், பறவையினங்களும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
ஏரி துார்ந்து போன நிலையில், ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், ஏரியில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, மணப்பட்டு தாங்கல் ஏரியை, முழுமையாக துார்வாரி கரைகளை பலப்படுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

