/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்ளை ஈ தாக்குதல் தீவிரம்: தென்னை விவசாயிகள் கவலை
/
வெள்ளை ஈ தாக்குதல் தீவிரம்: தென்னை விவசாயிகள் கவலை
வெள்ளை ஈ தாக்குதல் தீவிரம்: தென்னை விவசாயிகள் கவலை
வெள்ளை ஈ தாக்குதல் தீவிரம்: தென்னை விவசாயிகள் கவலை
ADDED : ஜன 21, 2024 12:57 AM
பொங்கலுார்:வெள்ளை ஈ தாக்குதலால் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படுவது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மரவள்ளி, கொய்யா, கத்தரி போன்ற பயிர்களை தாக்கி துவம்சம் செய்து வந்த வெள்ளை ஈக்கள் தற்பொழுது தென்னையை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கின்றன. அதிக காற்று, பெரும் மழை போன்ற காரணிகள் இவற்றை இயற்கையிலேயே கட்டுப்படுத்துகிறது.
இந்த ஆண்டு போதுமான மழை பெய்யவில்லை. இதனால் இவற்றின் இனப்பெருக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வெள்ளை ஈக்கள் தாக்கிய மரங்களின் ஓலைகள் அவற்றின் கழிவுகளால் கருப்பு நிறமாக மாறி வருகின்றன.
எனவே, அவற்றால் ஒளிச் சேர்க்கை செய்ய முடியாமல் போகிறது. மரத்திற்கு சத்து பற்றாக்குறை ஏற்பட்டு காய்ப்புத் திறன் குறைகிறது. மகசூல் இழப்பு ஏற்படுவதால் விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
வெள்ளை ஈக்கள் தென்னை மர இலையின் அடிப்பாகத்தில் ஒளிந்து கொள்கின்றன. மரம் உயரமாக இருப்பதால் அவற்றை விவசாயிகளால் எளிதாக கட்டுப்படுத்த முடிவதில்லை. நாளடைவில் ஓலைகள் கருகி விடுகிறது. ஏற்கனவே தேங்காய் விலை வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
விலை உயர்வுக்காக போராடி வருகிறோம். வெள்ளை ஈ தாக்குதலும் சேர்ந்து கொண்டதால் மகசூல் பாதிக்கப்பட்டு மேலும் நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டு முன் ஒட்டுண்ணி விட்டு அதை தடுக்க அரசு முயற்சி எடுத்தது.
அது போன்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை அரசு எடுக்க வேண்டும். இப் பிரச்சினை சம்பந்தமாக சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை துறை இயக்குனரை சந்தித்து முறையிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

