/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வேத ஆகமங்களால் ஜீவராசிகள் உயர்வடையலாம்'
/
'வேத ஆகமங்களால் ஜீவராசிகள் உயர்வடையலாம்'
ADDED : ஜூன் 24, 2025 11:47 PM
அவிநாசி; ''வேத ஆகமங்களும் தழைத்து வளர்ந்து, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உயர்நிலை அடைவார்கள்,'' என, வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி அருளாசி வழங்கினார்.
பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத பாடசாலை ஸ்ரீகுருகுலத்தின் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் - மஹாலட்சுமி தம்பதியர் மணி விழா, அவிநாசியில் நடந்தது. வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி, மணிவிழா நிகழ்வுகளை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அருளாசி வழங்கி, மஹா சுதர்சன யாகத்தின் பூர்ணாகுதியின் போது சங்கல்பம் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து, யாகசாலை வேதமந்திரங்களை உச்சாடனம் செய்து வந்த, பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை மாணவர்களை பாராட்டினார்.
மணிவிழா கண்ட தம்பதியரை வாழ்த்திய ரவி சங்கர் குருஜி, ''மணி விழா கண்ட சுந்தரமூர்த்தி சிவாச்சார்யார் - மஹாலட்சுமி தம்பதியர் நீடூழி வாழ வேண்டும்.
மணி விழாவை முன்னிட்டு, உலக நலன் வேண்டி, மஹாருத்ர பாராயணம், மஹா சுதர்சன யாகம், ருத்ரைகாதசினி வழிபாடுகளை செய்ததால் உலகின் அனைத்து ஜீவராசிகளும் உய்வடையும்; தொழில் வளம் சிறக்கும். 'வேத சிவாகம வித்வத் ஸ்தஸ்' மூலமாக, வேத ஆகமங்களும் தழைத்து வளர்ந்து, உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உயர்நிலை அடைவார்கள்,'' என்றார்.
முன்னதாக, சைவ ஆகமத்தில் டாக்டர் பட்டம் பெற்ற தீபா துரைசாமி பேசியதாவது:
மணிவிழா தம்பதியை, வாழும் கலை குருஜியும், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட பல்வேறு ஆதீனங்களும், வேத விற்பன்னர்களும், வாழ்த்தியுள்ளனர். சைவ சமயத்தை உயர்த்தி, உலக மக்கள் நெறியான நல்வாழ்வு வாழ ஆச்சாரியார்கள் வழிகாட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீகுருகுலம் மாணவர்களும், வேத ஆகம பூஜைகளை செய்துள்ளனர்.புண்ணியதலமான அவிநாசியில், தலபுராணம், பிராய்ச்சித்தம் மற்றும் வேத ஆதக விளக்க புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மனித வாழ்வின் மகத்துவத்தை உலகம் அறியும். இவ்வாறு, அவர் பேசினார்.