/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்; விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
/
நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்; விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்; விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட திட்டம்; விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
ADDED : ஜூன் 25, 2025 12:10 AM

திருப்பூர்; பி.ஏ.பி., நீர் திருட்டை தவிர்க்க கோரி, வெள்ளகோவில் சுற்றுவட்டார விவசாயிகள், கால்நடைகளுடன் சென்று, பொள்ளாச்சி நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட மேற்கொண்ட முயற்சியை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பரம்பிக்குளம் -ஆழியாறு நீர் பாசன திட்டத்தில், வெள்ளகோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகள் கடைமடையாக உள்ளன. ஏராளமான விவசாயிகள், இந்நீரை நம்பி விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில், 'வாய்க்காலில் திறந்து விடப்படும் நீர், கடைமடையை முழுமையாக வந்து சேர்வதில்லை' என, விவசாயிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடுத்து, நீர் திருட்டு தடுப்பது தொடர்பான வழிகாட்டுதலையும் பெற்றுள்ளனர். இருப்பினும், நீர் திருட்டு தடுப்பது தொடர்பாக, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், போராட்டத்தின் வாயிலாக, அரசின் கவனம் திருப்ப திட்டமிட்டனர். நேற்று காலை, பொள்ளாச்சி பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்ட விவசாயிகள், குதிரை, மாடு உள்ளிட்ட கால்நடைகளுடன், பெருந்திரளாக கிளம்பினர். பெண்களும் திரளாக பங்கேற்றனர். காங்கயம் - பகவதிபாளையம் பிரிவில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், விவசாயிகளை மேற்கொண்டு செல்லாதவாறு தடுத்தனர்.
இதில், விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின், விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் சிலரை குண்டுக்கட்டாக துாக்கிவந்து, வாகனங்களில் ஏற்றினர். அவர்களை ஊதியூர், காவலிபாளையம் பழனிமுருக பக்தர்கள் மண்டபத்தில், அமர வைத்தனர். இதனால், அப்பகுதி, போர்க்களம் போல காட்சியளித்தது.
தள்ளுமுள்ளுவில் பிரியா, கோபால், பிரகாஷ், சாமிநாதன் உட்பட விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்; சிலர் மயக்கமடைந்தனர். அவர்களை உடனுக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை என, விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், ஆம்புலன்ஸ் வாயிலாக அவர்கள் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். தங்கள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை, மண்டபத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.