ADDED : செப் 18, 2025 12:15 AM
காங்கயம்; காங்கயத்தில், மனைவியை கொலை செய்து, தப்பிய வடமாநில தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கவுரங்க மண்டல், 37. மனைவி ரிங்குமண்டல், 31. தம்பதியினர், திருப்பூர் மாவட்டம், காங்கயம், முத்துார் ரோடு, படியாண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
சமீபத்தில், ஊரில் இருந்து வந்த மனைவிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் குடும்ப பிரச்னை எழுந்தது. தகராறு முற்றியதில், ஆவேசம் அடைந்த கவுரங்க மண்டல், தனது மனைவியை கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, இரவோடு, இரவாக தப்பி சென்றார்.
நேற்று காலை நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் பூட்டியிருந்த காரணத்தால், அக்கம்பக்கத்தினர் கதவை திறந்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் ரிங்குமண்டல் இறந்து கிடந்தார்.
தகவலின் பேரில், காங்கயம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து, கொலை செய்து தலைமறைவான கவுரங்க மண்டலை போலீசார் தேடி வருகின்றனர்.

