திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தமிழ் மந்திரங்கள் ஓதப்படும் என தகவல்
திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் தமிழ் மந்திரங்கள் ஓதப்படும் என தகவல்
ADDED : ஜூன் 25, 2025 03:02 AM

மதுரை:'திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை பயன்படுத்த தாக்கலான வழக்கில், குறிப்பிட்ட இடைவெளிகளில் திருப்புகழ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மந்திரங்கள் ஓதப்படும்' என, அறநிலையத் துறை தரப்பு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவாதம் அளித்தது.
துாத்துக்குடி மாவட்டம், ரத்தினபுரி வியனரசு தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களையும் பயன்படுத்த, ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், 'சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மந்திரங்களை ஓதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என, அறநிலையத் துறை கமிஷனர், கோவில் இணை கமிஷனர், துாத்துக்குடி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அறநிலையத் துறை தரப்பு, 'கும்பாபிஷேகத்தின்போது அதிகாலை 5:00 முதல் 9:00 மணி வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் திருப்புகழ், கந்தர் அனுபூதி உள்ளிட்ட பல்வேறு தமிழ் மந்திரங்கள் ஓதப்படும்' என, தெரிவித்தது.
நீதிபதிகள், 'இந்த உத்தரவாதத்தை எழுத்துப்பூர்வமாக அறநிலையத் துறை தரப்பில் ஜூலை 2ல் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்தனர்.