அரைகுறையாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை திறப்பதா? பழனிசாமி கண்டனம்
அரைகுறையாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனையை திறப்பதா? பழனிசாமி கண்டனம்
ADDED : ஜூன் 25, 2025 02:30 AM

சென்னை : வேலுாரில் அரைகுறையாக கட்டப்பட்ட அரசு பல்நோக்கு மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
வேலுாரில், 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில், புதிதாக ஏழு மாடி கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என பெயரிட்டு, அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தி.மு.க., ஆட்சியில் புதிய அரசு மருத்துவமனைகள் திறக்கும்போது, தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை என, டாக்டர்களே குற்றஞ்சாட்டுகின்றனர்.
புதிய அரசு மருத்துவமனைகளுக்கு, ஏற்கனவே அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களில் இருந்து சுழற்சி முறையில் அனுப்புவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்றால், குறைந்தபட்சம் 300க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என, 700க்கும் மேற்பட்டவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
வேலுாரில் திறக்கப்பட உள்ள சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில், போதுமான அளவில் அடிப்படை கட்டமைப்புகளும், டாக்டர்களும் இல்லை.
வேலுார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலத்துறை மட்டுமே திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், வேலுார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து அயற்பணியில் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.