பல்லடம் செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் புனரமைப்பு
பல்லடம்: பல்லடம், -மங்கலம் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் பாலதண்டாயுதபாணி கோவில் தற்போது பொதுமக்களின் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.
அப்போது, கோவில் வளாகத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான வேப்ப மரம் ஒன்று, கட்டுமான பணிக்கு இடையூறாக அமைந்தது. வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் மரங்கள் வெட்டப்படும் நிலையில், இந்த ஆன்மிகப் பாரம்பரியமிக்க மரத்தை எப்படியாவது காப்பாற்ற பக்தர்கள் துடித்தனர். இதையடுத்து, அறநிலை யத்துறையின் அனுமதி பெற்று, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த மரம் காப்பாளர் கனகராஜ் உதவியுடன் மரத்தை இடப்பெயர்ச்சி செய்ய முடிவு செய்தனர். அகழ் இயந்திரம் மற்றும் கிரேன் மூலம், பல நுாறு கிலோ எடை கொண்ட அந்த வேப்பமரத்தின் தண்டுப்பகுதி வேருடன் பத்திரமாகப் பெயர்த்தெடுக்கப்பட்டது.அங்கிருந்து லாரி மூலம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வளாகத்தில் மறு நடவு செய்யப்பட்டது. புத்துயிர் பெற்றுள்ள அந்த மரத்திற்குச் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன.