புதுச்சேரி காளத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நிறைவு
புதுச்சேரி: புதுச்சேரி காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரியுடன் நேற்று நிறைவு பெற்றது.
புதுச்சேரி மிஷன் வீதி காளத்தீஸ்வரர் வரதராஜ பெருமாள் கோவில், 23ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இரவில் பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது. விழாவின் நிறைவு நிகழ்வுகளான கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரி நேற்று நடந்தது. பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான நேற்று காலை வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் இருந்து பிரம்மோற்சவக் கொடி முறைப்படி இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதியம், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாளுக்குச் சிறப்புத் திருமஞ்சனம், தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.