மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சன்னதி படிக்கட்டுகளுக்கு வெள்ளிக்கவசம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகளின் ஒருபகுதியாக அம்மன், சுவாமி சன்னதிகளின் படிக்கட்டுகளுக்கு உபயதாரர் மூலம் ரூ.13 லட்சத்தில் வெள்ளிக்கவசம் பொருத்தப்பட உள்ளது. வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணி ஆக.,30க்குள் முழுமை அடைகிறது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இந்தாண்டு செப்.,17ல் நடக்க உள்ளது. இதற்கான திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் சுவாமி சன்னதி கொடிமரம் பகுதி நந்தி சிலை அருகேயுள்ள பழமையான கொடிமரம் சேதமடைந்திருந்ததால், அதற்கு பதில் புதிதாக பொருத்த பாலாலயம் நடந்தது. இதேபோல் அம்மன், சுவாமி சன்னதிகளின் படிக்கட்டுகளில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளிக்கவசம் சேதமடைந்திருந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதிய கவசம் அமைக்க திட்டமிடப்பட்டது. மொத்த மதிப்பீடு ரூ.13 லட்சம். இதை தங்கள் செலவில் செய்து தர தி.மு.க., முன்னாள் அமைச்சர் தியாகராஜனும், அவரது தாயாரான அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணியும் முன்வந்துள்ளனர்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற ஐதீகப்படி இக்கோயிலுக்கு 2021ல் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.,2ல் கோயிலின் வீரவந்தராயர் மண்டபம் தீ விபத்தில் சேதமடைந்ததால் தள்ளிப்போனது. தற்போது ஒருபுறம் இம்மண்டபம் சீரமைப்பு பணியும், மறுபுறம் செப்.,17ல் நடக்கவுள்ள கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளும் நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்திற்கான துாண்கள் பொருத்தப்பட்டு விட்டன. தற்போது கீழ்தளத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதைதொடர்ந்து மேல் தளத்தில் தட்டோடு பதிக்கும் பணி நடக்க உள்ளது. ஆக.,30க்குள் அனைத்து பணிகளையும் முடிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.