செங்கழுனி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
விருத்தாசலம்: பூதாமூர் செங்கழுனி மாரியம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம், பூதாமூர் செங்கழுனி மாரியம்மன் கோவிலில், 44வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, கடந்த 24ம் தேதி மாலை 5:00 மணியளவில் திருவிளக்கு பூஜை, கடந்த 31ம் தேதி காலை 7:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், செடலணிந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (1ம் தேதி) கஞ்சி கலய ஊர்வலம், சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (2ம் தேதி) மாலை 5:00 மணியளவில் தெற்கு பெரியார்நகரில் உள்ள ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து செங்கழுனி மாரியம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதில், ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.