உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் மட்டுமே தோஷ நிவர்த்தி பூஜை: குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகம் உத்தரவு

கோவிலில் மட்டுமே தோஷ நிவர்த்தி பூஜை: குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகம் உத்தரவு

‘குக்கே சுப்ரமணியா கோவிலில் மட்டுமே, தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்ய வேண்டும். தனியார் இடத்தில் செய்தால் எந்த பலனும் கிடைக்காது. இந்த தவறை செய்ய வேண்டாம்’ என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம், சுள்ளியா தாலுகாவில், குக்கே சுப்ரமண்யா கோவில் அமைந்துள்ளது. இது, வரலாற்று பிரசித்தி பெற்ற கோவிலாகும். சர்ப்ப தோஷங்களை நிவர்த்தி செய்வதில், பெயர் பெற்றதாகும். எனவே, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள், குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு வந்து, நிவர்த்தி பூஜைகள் செய்கின்றனர்.

திருமண தடை உள்ளவர்கள், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் பிரச்னைகளால் அவதிப்படுவோர், இங்கு வந்து சுப்ரமண்யாவை வேண்டி, தோஷ நிவர்த்தி செய்தால், நினைத்தது நடக்கும். திருமணம் கை கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே தினமும் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதுபோன்று வரும் பக்தர்கள் பலரும், கோவிலில் தோஷ நிவர்த்தி பூஜை செய்வதற்கு பதில், அங்குள்ள தனியார் விடுதிகளில் தங்கி, அர்ச்சகரை வரவழைத்து தோஷ நிவர்த்தி பூஜை செய்கின்றனர். ஆனால் இது போன்று செய்வது, பலன் அளிக்காது என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: குக்கே சுப்ரமண்யா கோவில், தோஷ நிவர்த்திக்கு பெயர் பெற்றதாகும். பக்தர்கள் கோவிலில் மட்டுமே, தோஷ நிவர்த்தி பூஜைகள் நடத்த வேண்டும். அப்போதுதான் அதற்கான முழு பலன் கிடைக்கும். மாறாக இடைத்தரகர்கள் மூலமாக, தனியார் தங்கும் விடுதிகள், மடங்கள், புரோகிதர்களின் வீடுகள் உட்பட, தனியார் இடங்களில் நிவர்த்தி பூஜைகள் செய்தால், தோஷம் நிவர்த்தி ஆகாது.

நாக தோஷம், நாகர் பிரதிஷ்டை உட்பட மற்ற நிவர்த்தி பூஜைகளை கோவிலில் செய்ய வேண்டும். இடைத்தரகர்களை தொடர்பு கொண்டு, ஏமாற வேண்டாம். ஆன்லைனில் முன் கூட்டியே, பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !