அம்மன் கோவில்களில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி கோலாகலம்; சிறப்பு வழிபாடு
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாளுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. இதையடுத்து, ஆண்டாள் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தார். பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து இனிப்பு பலகாரங்களால் அலங்கார பூஜை நடந்தது. முகாசிசெம்சம்பட்டி வீரமாட்சி அம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பதுவம்பள்ளி வீரமாத்தி அம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவச் செல்வி உடனமர் சன்னதி, பெரிய அம்மன் கோவில் உள்பட அன்னூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.