மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்; கும்ப வடிவில் எழுந்துருளிய சுவாமி பக்தர்கள் பரவசம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின் நாளை நடக்கிறது. நாளை காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா செப்டம்பர் 8 அன்று சாந்தி ஹோமத்துடன் தொடங்கியது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று பத்தாம் கால வேள்வி பூஜை பிரதான யாகசாலையில் நடைபெற்று வருகிறது. யாகசாலை பூஜையில் கும்ப வடிவில் சுவாமி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரவசத்துடன் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ள நிலையில் இன்று கோயிலில் பரிவார மூர்த்திகள் எனப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.