/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அறிவியல் புனைவுக் கதைகளின் இன்றைய சுஜாதா
/
அறிவியல் புனைவுக் கதைகளின் இன்றைய சுஜாதா
ஜன 03, 2025

எழுத்தாளர் சுஜாதா எனும் பெயர் தமிழின் அறிவியல் புனைவுக் கதைகளின் உலகில் மிக முக்கியமானதொன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. ஸ்ரீரங்கம் சுந்தரராஜன் என்று அழைக்கப்படும் சுஜாதா, தமிழ் இலக்கியத்தில் அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித மனதின் ஆழத்தைக் கதைகளில் இணைத்துப் புதிய முறையில் வாசகர்களுக்குப் படைப்புகளை அளித்தவர். சுஜாதாவின் எழுத்துக்கள் புனைவுகளை மட்டுமல்லாமல், அறிவியல் சிந்தனையைப் பரப்பும் பணியாகவும் விளங்குகின்றன.
1970 மற்றும் 1980களில், தமிழில் அறிவியல் புனைவுகளை எழுதும் பணியில் அதிக ஆர்வம் காட்டியவர். அவருடைய முக்கியமான படைப்புகளில், 'என இனிய இயந்திரா', 'கன்னத்தில் முட்டும் நெருப்பு', 'மயான்' கதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் அறிவியல் புதினங்களை உள்ளடக்கியவை. அவருடைய கதைகள், தொழில்நுட்பம் மனித வாழ்க்கையில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை முன்வைக்கின்றன.
ரோபோட்டிக்ஸ், கீனோமிக்ஸ், மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொலைநோக்கு விஷயங்கள் சுஜாதாவின் கதைகளில் வெளிப்படுகின்றன. சுஜாதாவின் எழுத்துக்கள் அறிவியல் இலக்கியத்திற்கான வழியைக் காட்டிய பின்னணி காலத்திலும் அவரின் படைப்புகள் தமிழின அறிவியல் முத்திரையாகப் பதிந்திருக்கும். அவர் மறைவிற்குப் பின் வெற்றிடம் உள்ளதாகவே தமிழ் எழுத்தாளர்கள் நினைத்தனர்.
வட அமெரிக்க வரவேற்பறை நேர்காணல் நிகழ்வில் நான் முனைவர் க. திலகவதியை அமெரிக்க எழுத்தாளர்கள்பற்றிக் கேட்ட கேள்வி 'மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் வட அமெரிக்காவில் தமிழ் எந்தளவிற்கு வளர்ந்திருக்கிறது?' அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், 'அறிவியல் எழுத்தாளர் சுஜாதா போல இங்கு ஒருத்தர் ராம் பிரசாத் என்பவர் அறிவியல் புனைவு எழுத்தாளராக இக்கால இலக்கியத்தில் முத்திரை பதித்து வருகிறார்.
அவருடைய எழுத்தை வாசிக்கின்றபொழுது 'ஆகா இன்னொரு சுஜாதா நமக்குக் கிடைத்துவிட்டார்' என்று என் மனம் மகிழ்ந்தது. அவரை எனக்குத் தெரியாது. ஆனால், அவரைப் பற்றி நான் வாசித்தபோது சுஜாதா போல அமெரிக்காவில் ஒரு அறிவியல் புனைவெழுத்தாளர் உருவாகியிருக்கிறார் என்று என் மனது சந்தோசப்பட்டது.' என்று குறிப்பிட்டார்.
எனவே நான் இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தமிழ் எழுத்தாளர் ராம் பிரசாத்திடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் இங்கே:
'தமிழ் இலக்கியத்தினுள் நுழையப் பெரும்பான்மையோர்க்கு நுழைவாயிலாக இருப்பது வணிக எழுத்துக்கள்தாம் என்பதே நிதர்சனம். பள்ளிக்காலங்களில் அம்புலி மாமா, சிறுவர் மலர் என்று இருந்த எனது வாசிப்பு, பொறியியல் முடித்து, கணினித்துறையில் வேலை என்று விரிந்த பிறகு சுஜாதா, பாலகுமாரன் வழியாக இலக்கிய வெளிக்குள் நுழைந்தது எனலாம்.
' எத்துறையிலும், அனுபவம் கொண்டவர்களை வழித்தடங்களாகக் கொள்வது வழக்கமே. சுஜாதா ஒரு பொறியியல் வல்லுநராகப் பணியிலிருந்துகொண்டே, ஒரு குடும்பத் தலைவனுக்கான சகல கடமைகளையும் ஆற்றிக்கொண்டேதான், தான் நினைத்ததை எழுதினார். சுஜாதா மீதான எனது ஏற்புக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, ' பொதுவாழ்வை வெற்றிகரமாக நடத்திக்கொண்டே இலக்கியத்துறையிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக அவர் இயங்கியதுதான் என்றால் அது மிகையில்லை.
' தமிழ் ஆய்வாளர், முனைவர் க.திலகவதி ஒப்பிட்டதைப் போலவே இணைய நண்பர்கள் பலரும் என் எழுத்தை, எழுத்தாளர் சுஜாதாவினுடையதுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். ஒப்பிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஒரு புனைவை எழுதுவதற்கான இலக்கணங்களான முதல் பத்தியிலேயே துவங்கிவிடுவது, சிறுகதையின் வடிவத்தை வளைப்பது, எதிர்பாராத திருப்பத்தைத் தருவது போன்ற பண்புகளை வெகுதுல்லியமாக எழுதியவர் சுஜாதா.
' புனைவுகளிலேயே அரிதாக முயலப்படும் புனைவு வகையான அறிவியல் புனைவுகளில் அவர் இதையெல்லாம் செய்து பார்த்து அசத்தினார். அதே பண்புகள் எனது ஆக்கங்களிலும் வெளிப்படுவதால், அதையெல்லாம் கூட்டாக உணர்த்த, அவர் பெயரையே வாசகர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றே நான் புரிந்துகொள்கிறேன். அந்த வகையில், எழுத்தாளர் சுஜாதாவின் வழியில் அடுத்ததாக நான் பார்க்கப்படுவதில் மகிழ்ச்சியே. நான் பல காலமாக எனக்கு நெருங்கிய நண்பர்களிடம் அவ்வப்போது பகிர்வதையே முனைவர் க.திலகவதியும் குறிப்பிட்டது ஆச்சர்யமான நிகழ்வு.
' 2014 முதல் நான் வசிப்பது அமெரிக்கா. அறிவியல் புனைவுகள் பெருமளவு நான் எழுதத்துவங்கியது அமெரிக்காவிலிருந்துதான். எழுதத் துவங்கியபோது எதை எழுதுவது என்பது குறித்தான என் அனுமானம் இப்படியாக இருந்தது. கடல், கடல் சார்ந்த இடத்தில் வசிக்க நேரும் எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். போர்ச் சூழலில் மக்கள் பட்ட கஷ்டங்களை அருகிலிருந்து பார்த்த எழுத்தாளர் அம்மக்களின் வலிகளைக் கதைகளாக்குவார்.
' தோல் தொழிற்சாலையில் பணி செய்பவர்களை உறவினர்களாகக் கொண்ட எழுத்தாளர், அம்மக்களின் வாழ்வைக் கதைகளாக்குவார். இதே போல் மருத்துவம், வடசென்னை வாழ்வு, விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வு என்று ஒரு எழுத்தாளர் தான் சார்ந்திருக்கும் நிலப்பரப்பின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் எழுத்தை எழுதுவார். அப்படி எழுதுவது தான் சரியும் கூட.
' பத்து இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்த ஒருவர், அமெரிக்காவிலிருந்து உலகின் பிற இடங்களுக்குச் செல்ல நேர்கையில் அவரிடமிருந்து போரில் மக்கள் படும் வலிகளோ, தமிழகக் கடல் கிராமங்களின் கதைகளோ, வட்டார வழக்கோ, வடசென்னைக் கதைகளோ, மதுரை வாழ் தொல் குடி ஒன்றில் உள்ள வினோதமான பழக்கவழக்கங்களோ, விவசாய மக்களின் இன்னல்களோ, பழங்குடிகளின் பிரச்சனைகளோ, மலைவாழ் மக்களின் துயர்களோ, தமிழக கிராமங்களின் கதைகளோ, சங்க இலக்கியம்குறித்த விசாரமோ எதிர்பார்க்கப்படப்போவதில்லை.
' இன்றைக்குத் தமிழ் எழுத்துச் சூழலில் அறிவியல் புனைவுகள் எழுதுபவர்களில் பலர் பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் கணிதம் விருப்பப்பாடமாக எடுத்துப் படித்தவராக இல்லாமலும், சாதாரண நகர வாழ்வின் பின்னணியிலிருந்து வருபவராகவும் இருக்கலாம். பள்ளிக்காலத்தில் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து நூற்றுக்கு நூறு வாங்கி பொறியியல் படித்து, அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் அறிவியல் எழுத்தின் வாசகராகக் கூட இல்லாமல் இருப்பதும் பரவலாக நடந்து நாம் காண்கிறோம்.
' சுருங்கச்சொன்னால், அறிவியலைத் தன் இயங்கு ஆதாரமாகக் கொண்ட நாட்டிலிருந்து அறிவியல் தமிழின் உச்சம் வெளிப்படுவதே சரியாக இருக்க முடியும் என்றாகிறது. ஏனெனில், அப்படி அது வெளிப்படவில்லை எனில் எங்கோ எதிலோ தவறு நடக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது இல்லையா? (இதற்கு அர்த்தம், அமெரிக்காவிலிருந்து வெளிப்படுவது யாவும் அறிவியல் தமிழின் உச்சம் என்பதல்ல. தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்).
' அந்தப்படி, அறிவியல் தமிழ், அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியல், அமெரிக்காவில் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், அறிவியல் புனைவுகள், அதிபுனைவுகள், என்று அமெரிக்கத் தமிழ் இலக்கியம் விரிவடைய வேண்டும் என்று நான் பலமுறை, என் நெருங்கிய நண்பர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். அதை நண்பர்கள் அறிவார்கள். இதையே முனைவர் க. திலகவதி வெவ்வேறு வார்த்தைகளில் சுட்டினார் என்றே கொள்கிறேன்.
' நான் பலமுறை வலியுறுத்திய ஒன்று முனைவர், ஆய்வாளரிடமிருந்தும் வெளிப்பட்டிருப்பது, அமெரிக்கத் தமிழ் இலக்கியத்திடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன என்பதில் ஓர் ஒருமித்த கருத்து கல்வியாளர்களிடமும் இலக்கிய ஆன்றோர்களிடமும் இருப்பதையே சுட்டுகிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே. '
தமிழின் அறிவியல் புனைவுகளின் வரலாற்றில் சுஜாதாவின் தாக்கம் இன்று பல எழுத்தாளர்களை உந்துகிறது. அதில் ராம் பிரசாத் போன்றோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அமெரிக்கத் தமிழர் சமூகத்திலும் அறிவியல் தமிழ் வளர்ச்சி உறுதியாக உள்ளது. சுஜாதாவின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தனது திறமையை வெளிப்படுத்தித் தமிழ் இலக்கியத்தை மேலும் உயர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
ராம் பிரசாத்தின் படைப்புகள் தமிழக வாசகர்களைச் சென்று சேர வேண்டும். தமிழ் இலக்கிய உலகில் கணிதப்புனைவுகள், அறிவியல் புனைவுகளைத் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிறார். 2020ல் வெளியான இவரது 'வாவ் சிக்னல்' விஞ்ஞானப் புனைவுச் சிறுகதைகள் தொகுதி நூலுக்குத் தமிழ் நாடு அரசு 'சிறந்த சிறுகதை நூல்' விருது அளித்துச் சிறப்பித்திருக்கிறது. அவர் எழுதிய படைப்புகள்பற்றி மேலும் அறிய கீழே:
https://www.valaitamil.com/america-tamil-writers-2-Ramprasad_19823.html
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்